Friday, July 15, 2011

விலை ஏற்றம்

மது அருந்துவோர் இருக்கும்வரை
மதுவின் விலை ஏற்றம்தான் காணும்

புகை பிடிப்போர் இருக்கும்வரை

அந்தபுகையின் ஏற்றம்தான் காணும்

இரு சக்கர வாகனம் அதிகரிக்கும் போது

பெட்ரோல் விலை ஏற்றம்தான் காணும்

அடுத்த நிறுத்தத்திற்கு பஸ் பயணம்

செய்யும் வரை, கட்டணம் ஏற்றம்தான்காணும்

தங்கத்தை சேமிப்பவர் இருக்கும் வரை

தங்கத்தின் விலை ஏற்றம்தான் காணும்

நவீன ஆடையில் ஆசை இருக்கும் வரை

ஆடைகளின் விலை ஏற்றம்தான் காணும்

செல்போனுக்கு அடிமையாக இருக்கும் வரை

அதன் விலை ஏற்றம்தான் காணும்

டிவி நாடக மோகம் இருக்கும் வரை

அதன் எபிசோட் அதிகரிக்கத்தான் செய்யும்

லஞ்சம் கொடுப்போர் இருக்கும் வரை

லஞ்சம் அதிகரிக்கத்தான் செய்யும்

இவை எல்லாம் ஏற்றம் காணும் போது

"நம் அன்றாட உணவுப் பொருட்களின்"
விலைஏற்றம்தான் காணும்

"இவை எல்லாம் சரி செய்ய"


நண்பர்களே !


மது பழக்கத்தை நிறுத்துங்கள்

புகை பழக்கத்தை நிறுத்துங்கள்
சைக்கிளில் பத்து கிலோமீட்டர் வரை செல்லுங்கள்
அடுத்த நிறுத்தத்திற்கு நடந்து செல்லுங்கள்
தங்கம் சேமிப்பதை நிறுத்துங்கள்
நவீன ஆடையை ஆசையை குறையுங்கள்
பொது தொலை பேசியை உபயோகிங்கள்
டிவி சீரியல் பார்ப்பதை குறையுங்கள்
லஞ்சம் கொடுப்பதை நிறுத்துங்கள்

"இல்லை என்றால்"

இதை எல்லாம் சரி செய்ய
ஒரு "ஒரு நாள் முதல்வரை"

"உருவாக்குங்கள்" 

நன்றி:எழுதியவர் :சேதுராமலிங்கம்.உ

நெஞ்சு வலி இதயம் அடிக்கும் எச்சரிக்கை மணி!!!!!!!!!!


தனது பிரச்சனையை உணர்த்துவதற்காக இதயம் எச்சரிக்கை மணி அடிக்கும். அந்த எச்சரிக்கை மணிதான் நமக்கு இதய வலியாக (நெஞ்சு வலி) பிரதிபலிக்கிறது. நெஞ்சுவலி என்பது நமது மார்பின் நடுப்பகுதியில் உணரப்படுவது. இந்த வலியானது நெஞ்சு எலும்பின் நடுப்பகுதியில் ஏற்படும் என்றாலும் சில சமயங்களில் இடது மேல் கை, கழுத்து, தாடை போன்ற பகுதிகளுக்கும் பரவக்கூடும். பலவகையான இன்னலுக்கு ஆளாகும் இதயமானது தனது அவல நிலையை உணர்த்தும் அபயக் குரல்தான் நெஞ்சு வலியாக உருவெடுக்கிறது.

தீவிரமாக நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்தல், நீண்ட நேரம் நடப்பது, செங்குத்தான மலைப் பகுதியில ஏறுதல், கடுமையான வெப்பம், கடுமையான குளிர், கடுமையான உடல் சோர்வு, கடுமையான இன இறுக்கம், அளவுக்கு அதிகமாகக் கோபம் கொள்ளுதல், வயிறு புடைக்க உணவு சாப்பிடுதல் போன்ற சூழல்களில் நெஞ்சு வலி ஏற்படக்கூடும். இந்த வலி ஏன் ஏற்படுகிறது? இதயம் தனக்குத் தேவையான ரத்தத்தை மகா தமனியின் முதல் நிலைக் கிளைகளான இதயத் தமனிகளிடம் இருந்து பெறுகிறது. இவை, சிறுசிறு கிளைகளாகப் பிரிந்து இதயம் முழுவதும் வலைபோல் படர்ந்துள்ளன. நாம் அன்றாடம் நியாயமான, அளவான வேலைகளைச் செய்யும் போது இதயத் தமனிகள் இதயத் தசைகளுக்குத் தேவையான உயிர்வெளி, ஹார்மோன்கள், ஊட்டச்சத்துகள், உயிர்ச்சத்துகள் ஆகியவற்றை அளிக்கின்றன.

ஆனால் அளவுக்கு அதிகமாக தொடர்ந்து இதயத்துக்கு வேலை தரும்போது அந்தச் சுமையைச் சமாளிக்க முடியாமல் இதயத் தமனிகள் திணறுகின்றன. இதன் காரணமாக இதயத் தசைகள்போதுமான உயிர்வளிச் சத்துக்களைப் பெற முடியாமல் இதயத்தில் வலி ஏற்படுகிறது. நாம் பிறக்கும்போது தூய்மையாகவும், நன்கு நெகிழும் தன்மையுடையதாகவும் இதயத் தமனிகள் இருக்கின்றன. காலப்போக்கில் இதயத் தமனிகளின் உள் பகுதியில் பலவகையான கொழுப்புப் பொருள்கள் படிந்து தமனிகளின் உள்விட்டமானது கொஞ்சம், கொஞ்சமாக அடைபட்டு குறுகிவிடுகின்றன.

அதோடு, தமனிகள் தங்களின்நெகிழும் தன்மையையும் இழந்து தடித்துவிடுகின்றன. இதனால் இதயத்துக்குச் செல்லும் ரத்தமானது தடைபடுவதால் இதய தசைகளில் வலி ஏற்படுகிறது. இதயத்துக்குப் போதுமான ஓய்வு கொடுக்காமல் அளவுக்கு அதிகமாக அதை வருத்துவதால் ஏற்படும் வலி என்றும் இதைக் குறிப்பிடுகிறார்கள். ஆரம்ப நிலையில் இதய வலியைக் கண்டறிந்துவிட்டால் எளிதாக அதைச் சமாளித்துவிட முடியும்.ஆனால் இதய வலியைச் சமாளிக்க வாழ்க்கை முறையில் பல மாற்றங்கள் தேவைப்படும். போதுமான ஓய்வு இல்லாமல் தங்கள் உடலை வருத்திக்கொள்பவர்களும் அடிக்கடி களைப்படைபவர்களும்தான், இதய வலிக்கு அதிகமாக ஆளாகிறார்கள்.எனவே, வலியில் இருந்து தற்காலிகமாக விடுதலை பெற வேண்டும் என்றால் முதல் கட்டமாக முழுமையான ஓய்வு, உடல் அளவிலும், மனதளவிலும் தேவை.

அன்றாட வேலைச் சுமைகளை ஓரளவு குறைத்துக் கொள்வதோடு அல்லாமல் காரணம் இல்லாமல் அடிக்கடி கோபப்படுதல் போன்ற இதய வலியை ஏற்படுத்தக்கூடிய வாழ்க்கை முறைகளை மாற்றிக் கொள்வது மிகவும் சிறந்த தற்காப்பு முறையாகும் இதய வலிக்கான சிகிச்சையில் மருந்துகளுக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது. இதய வலிக்குத் தற்போது பலவகையான மருந்துகள் உள்ளன. பாதிக்கப்பட்டவரின் உடல்நிலை, நோயின் தன்மை, இதய வலியின் தன்மை, உடலின் அமைப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பாதிக்கப்பட்டவருக்கு இதய மருத்துவர் தகுந்த மருந்தைப் பரிந்துரைப்பார். இதய மருந்துகள், குறுகிய இதயத் தமனகளை விரிவடையச் செய்கின்றன. இதன் மூலமாக ரத்தமானது தங்கு தடையில்லாமல் இதயத்துக்கு சென்று இதயத்துக்குத் தேவையான உயிர்வளியையும், சத்துகளையும் அளிக்கத் துணை புரிகின்றன. இதனால் இதய வலியானது தற்காலிகமாக நீங்குகிறது.இதய வலியை ஓரளவு கட்டுப்படுத்தக்கூடிய மருந்துகளில் நைட்ரேட் வகை மருந்துகள் பீட்டா பிளாக்கர்ஸ் கால்சியம் எதிர்ப்பு மருந்துகள் போன்றவை முக்கியமானவை.

இவற்றில் நைட்ரேட் வகை மருந்துகளை குறுகிய நேரத்தில் செயல்படும் மருந்துகள், நீண்ட நேரம் செயல்படும் மருந்துகள் என இரண்டு வகைகளாகப் பிரித்துள்ளனர். இவற்றில் ஒவ்வொரு மருந்தும் ஒவ்வொரு வகையான செயல்திறன் கொண்ட மருந்தாக அமைந்திருக்கிறது இதய வலியைப் போக்கும் பலவகையான மருந்துகளை ஒரு நோயாளி போதுமான அளவு தொடர்ந்து பயன்படுத்தியும் தக்க பலன் கிடைக்கவில்லையென்றால் வேறு சில மருத்துவ முறைகளைக் கையாள வேண்டும். இதயத் தமனிகளில் ஏற்பட்டுள்ள அடைப்புகளின் தன்மையை அறிந்து கொள்ள முதலில் ஆஞ்சியோகிராபி செய்யப்பட வேண்டும் இதயத் தமனிகளில் உள்ள அடைப்பின் தன்மை சிறிய அளவில் இருந்தால் ஆஞ்சடியோபிளாஸ்டி முறையின் மூலமாக அடைப்புகள் மிகவும் அதிகமாக இருந்தால் பைபாஸ் சர்ஜரி செய்வதுதான் அவற்றை நீக்குவதற்கான நிரந்தர சிகிச்சையாக இருக்க முடியும். இத்தகைய அறுவைச் சிகிச்சையின் மூலம் இதயத்துக்கு நேரிடையாக ரத்த ஓட்டம் கிடைக்கும் இதய வலியால் பாதிக்கப்படுபவர்கள் கீழ்கண்ட தற்காப்பு முறைகளைக் கையாண்டு அது தீவிரமான நிலையை அடையாமல் தடுக்க முடியும் அடிக்கடி இதய வலிக்கு ஆளாகுபவர்கள் அந்த வலியை அலட்சியம் செய்யாமல் இதயம் விடும் அபயக்குரலாகக் கருதி, விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் ஏற்கனவே ரத்தமிகு அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவராக இருந்தால் மருத்துவர்களின் துணையுடன் தக்க மருந்துகளின் மூலமாக ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை சரியான அளவில் வைத்திருக்கும் வகையில் அன்றாட உணவில் மாற்றங்களைச் செய்ய வேண்டும்.உடல் பருமன் உள்ளவராக இருந்தால் உடலின் எடையைக்குறைக்க வேண்டும் ஏற்கனவே புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர் என்றால் புகைப் பிடிப்பதை முழுமையாக நிறுத்த வேண்டும்.வாரத்தில் குறைந்தது 5 நாள்களாவது உடற்பயிற்சி செய்து உடலை வலுவாக வைத்துக் கொள்வதும் முக்கியம்.
நல்ல நூல்களில் படித்த தகவல்களில் இருந்து திரட்டப்பட்டவை.
நன்றி.முத்துமணி

Wednesday, July 13, 2011

கேன்சருக்கு மருந்தாகும் எலுமிச்சை...

இது உண்மைதான்; நம்புங்கள்.
ஆம்! கேன்சர் என்னும் புற்றுநோய் அரக்கனுக்கு மருந்தாகிறது எலுமிச்சை.
உலகம் முழுவதும் கேன்சருக்கு பலியாவோர் எண்ணிக்கை கொஞ்ச நஞ்சமல்ல. இந்த கொடிய வியாதியை முற்றிலும் குணப்படுத்தும் மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. தற்போதுள்ள மருத்துவ முறைகளில் ஆரம்ப கட்டத்தில் நோயை கண்டுபிடித்துவிட்டால் மட்டுமே குணப்படுத்த முடியும். மற்றபடி நோய் பாதிப்பை தடுத்து வாழ்நாளை அதிகரிக்க மட்டுமே முடியும் என்ற நிலை உள்ளது.
உலக மருத்துவ விஞ்ஞானிகள் புற்று நோயை குணப்படுத்தும் மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அப்படிப்பட்ட ஆராய்ச்சி ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டது தான் இந்த செய்தியின் துவக்கத்தில் சொல்லப்பட்ட தகவல்.
அமெரிக்காவின் பால்டிமோரில் செயல்பட்டு வரும் ஒரு சுகாதார அமைப்பு தான் இந்த பெருமைக்குரிய கண்டுபிடிப்புக்கு சொந்தக்காரர்கள். தற்போது இந்த வியாதிக்கு உள்ள சிகிச்சைகளில் முக்கியமானது கீமோ தெரபி.
இந்த கீமோ தெரப்பியின் பக்க விளைவுகளையும் தாங்க முடியாத வேதனைகளையும் சொல்ல வேண்டியதில்லை. இதற்கொரு வரப்பிரசாதமாக வந்துள்ளது தான் எலுமிச்சை.
உடலில் நல்ல செல்களுக்கு எந்த விதமான ஆபத்தையும் ஏற்படுத்தாமல், ஆபத்தான செல்கள் மற்றும் கேன்சராக மாறிவிடக்கூடிய கட்டிகளை மட்டுமே அழிக்கும் அபரிமிதமான ஆற்றல் பெற்றது எலுமிச்சை என்கிறது இந்த ஆராய்ச்சி.
கீமோ தெரப்பியைவிட 10 ஆயிரம் மடங்கு ஆற்றல் கொண்டது இந்த எலுமிச்சை என்பது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள ஆச்சரியமான உண்மை.
அதுமட்டுமா?
ஆபத்தான பாக்டீரியாக்கள், கிருமிகள் மற்றும் காளான்களையும் ஒரு கை பார்க்காமல் விடுவதில்லையாம் இந்த எலுமிச்சை.
இரத்த ஓட்டத்தை ஒழுங்குபடுத்துவது, மன அழுத்தங்களை கட்டுப்படுத்துவது, நரம்பு கோளாறுகளை சரி செய்வது என்று எலுமிச்சையின் மகிமை.... பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
மார்பகம், ப்ராஸ்டேட், கல்லீரல் மற்றும் கணையம் என்று கேன்சர் எங்கிருந்தாலும் அவற்றை அழிக்கும் பணியை சிறப்பாக செய்ய முடியுமாம் எலுமிச்சையால். இத்தகைய சிறப்பு வாய்ந்த எலுமிச்சையின் மருத்துவ குணத்தை பயன்படுத்தி புற்று நோயை அழிக்கும் மருந்துகளை உருவாக்கும் முயற்சிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்த அரிய கண்டுபிடிப்பு மருத்துவ ரீதியாக வெளி வந்தால் புற்று நோய்க்கு சிக்கனமான, முற்றிலுமான தீர்வாக இருக்கும். எனவே, தற்போது இதற்கான மருந்துகளை தயார் செய்து கொள்ளை லாபம் ஈட்டி வரும் வர்த்தக நிறுவனங்களின் வயிற்றில் புளியை கரைத்து வருகிறது எலுமிச்சை.

குழந்தை அழுது கொண்டே இருக்கிறதா? உஷார்


குழந்தை அழுது கொண்டே இருக்கிறதா? உஷார்

குழந்தைகள் அழுவதுதான் அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பது பலரின் கருத்து. ஆனால் குழந்தைகள் தொடர்ந்து அழுவதால் அதன் மூளை வளர்ச்சி பாதிக்கப்படும் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
நீண்ட நேரம் குழந்தை அழும்போது பெற்றோர்களின் கவனிப்பு இல்லாமல் போகும் பட்சத்தில் குழந்தைகளின் கற்றுக்கொள்ளும் திறன் குறைந்து போவதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
மனநலம் பாதிக்கும்
குழந்தைகள் அழுவது பசியை தாய்க்கு உணர்த்தவே என்பது எல்லோரும் அறிந்தது. உடலில் உள்ள நோய்களையும், தனக்கு ஏற்படும் பிரச்சினைகளையும், தாய்க்கு உணர்த்த குழந்தைகளுக்கு இருக்கும் ஒரே வழி அழுகை மட்டும் தான். குழந்தைகள் நீண்ட நேரம் அழும்போது மன அழுத்தத்தை ஏற்படுத்தும் கார்டிசோல் ஹார்மோன் அதிக அளவில் சுரக்கிறது. இதனால் குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு மனநலம் பாதிக்கும் வாய்ப்புள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
கற்றுக்கொள்ளும் திறன்
இருபது நிமிடங்கள் வரை குழந்தைகள் அழ அனுமதிக்கலாம். ஆனால் அதற்கு மேலும் யாருடைய கவனிப்பும் இன்றி அழுது ஓய்ந்து போகும் குழந்தைகள்தான் பாதிக்கப்படுகின்றனர். பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நடவடிக்கைகள் மற்ற குழந்தைகளிடம் இருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கும். இதனால் அவர்களின் எதிர்காலம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
அவ்வாறு பாதிக்கப்படும் குழந்தைகள் கல்வி, விளையாட்டு போன்றவற்றில் சிறந்து விளங்குவதில்லை. ஆளுமைத்திறன் குறைந்து மந்தத்தன்மையோடு காணப்படுவார்கள் என்று ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளனர். அழும் நேரத்தில் குழந்தைகளை அரவணைப்பதோடு, அதற்கான காரணத்தை உடனடியாக கண்டறிய வேண்டும்.
சத்தமில்லாத மரணம்
இரவு நேரத்தில் தொட்டிலில் உறங்கும் குழந்தைகள் அழும்போது பசிக்காகத்தான் அழுவதாக நினைக்கும் தாய்மார்கள், அவசரமாக பாலை புகட்டி உறங்க வைக்கின்றனர். இதனால் மூச்சு திணறல் ஏற்பட்டு சத்தமில்லாமல் குழந்தைகள் மரணமடைகின்றன. இதனை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆண் குழந்தைகளுக்கு ஆபத்து
இதுபோன்ற தொட்டில் மரணங்கள் குளிர்காலத்தில் தான் ஏற்படுகின்றன. எடைகுறைவான, ப்ரீமெச்சூர் குழந்தைளுக்கே இந்த ஆபத்து அதிகம். ஆண்குழந்தைகள் அதிக அளவில் தொட்டில்களில் மரணமடைவது கண்டறியப்பட்டுள்ளது. அனீமியா என்ற இரத்தசோகை நோயால் தாய் பாதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண் இருபதுக்கும் குறைவான வயதுடையவளாக இருந்தாலோ குழந்தைக்கு இந்த ஆபத்து நேரலாம்.
குப்புற படுக்க வைப்பதை தவிருங்கள்
குழந்தைகளை குப்புறப் படுக்க வைத்து உறங்க வைப்பதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். குப்புறப் படுக்க வைக்கும்போது குழந்தையின் உடல் எடை அதன் மென்மையான மார்பு எலும்புகளை அழுத்துவதால் குழந்தைக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்படும் அபாயம் இருக்கிறது.
குழந்தையை மல்லாக்கப் படுக்க வைத்தே பழக்க வேண்டும். இப்படிப் படுக்க வைப்பதால் குழந்தைகளுக்கு மேலே சொன்ன ஆபத்து ஏற்படும் வாய்ப்பு 30 முதல் 50 சதவீதம் வரைக்கும் குறைகிறது என்கின்றன ஆராய்ச்சிகள்.
தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு இந்த ஆபத்து ஏற்படும் வாய்ப்பு 50 சதவீதம் குறைகிறது என்று கூறும் மருத்துவர்கள், கட்டாயப்படுத்தி குழந்தைக்கு பால் புகட்டக் கூடாது என்கின்றனர். பசியால் அழும் நேரத்தில் பால் புகட்டினாலும் கூட, ஏப்பம் எடுத்துவிட்டபிறகே குழந்தையை படுக்கையில் கிடத்த வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை.
அரவணைப்பு முக்கியம்
மேலை நாடுகளோடு ஒப்பிட்டால் இந்தியாவில் இப்படிப்பட்ட குழந்தை மரணங்கள் குறைவுதான். காரணம், மேலை நாடுகளில் குழந்தைகளைப் பெற்றோர் தனியாகப் படுக்க வைப்பதுதான். தனியாக படுப்பதால் கதகதப்பையும் ஒரு பிடிமானத்தையும் தேடி, குழந்தை குப்புற கவிழ்ந்துகொள்ளும் வாய்ப்புகள் அதிகம். இதைப் போன்ற சமயங்களில் திடீரென்று தொட்டில் மரணம் நிகழ்கிறது.
நம்நாட்டில் பெரும்பாலும் தாய்மார்களின் அணைப்பிலேயே குழந்தையை (மல்லாக்க) படுக்க வைத்து மென்மையாகத் தட்டிக் கொடுத்து தூங்க வைப்பதால், அந்த ஸ்பரிசமும், அணைப்பும் கிடைத்த நிம்மதியில் குழந்தை பெரும்பாலும் அப்படியே தூங்கிவிடுகிறது. அணைப்பும் ஆதரவும் எவ்வளவு முக்கியம் என்பதை இதிலிருந்து உணரலாம்.

நார்ச்சத்து நிறைந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு!

சர்க்கரை வள்ளிக்கிழங்கு, நம்முடைய காரமான சமையலுக்கு ஒத்துப் போகாதது. அதை அதிகம் உணவில் சேர்க்காமல் இருந்தால் நஷ்டம் அதுக்கில்லை. நமக்குத்தான். ஏனெனில் அதிக சத்து நிறைந்த காய்கறிகளில் இதுவும் ஒன்று. இதிலுள்ள ஒரு என்ஸைம் இதன் மாவுச்சத்தை, கிழங்கு முற்றியதும் சர்க்கரையாக மாற்றி விடுகிறது. சேமித்து வைக்கும் போதும் சமைக்கும் போதும் இனிப்பு இன்னும் அதிகமாகிறது. கிழங்கு வகையாக இருந்தாலும் இதற்கும் உருளைக்கிழங்குக்கும் சம்பந்தமில்லை. இது சுற்றிப்படரும் கொடி வகையான மார்னிங் குளோரி வகையைச் சார்ந்தது. சர்க்கரை வள்ளியின் இலைகள் மார்னிங் குளோரி வகையின் இலையைப் போன்றிருக்கும்.
சரித்திரம்: இது ஒரு அமெரிக்கச் செடி. முதலில் மத்திய, தென் அமெரிக்காவிலும், மெக்சிகோவிலும் பயிரிடப்பட்டது. மெக்சிகோ பக்கத்தில் உள்ள தீவுகளில் சர்க்கரை வள்ளிக்கிழங்கை ஆக்ஸி என்று அழைத்தனர். கொலம்பஸ் தன் முதல் கடல் பயணத்தை முடித்து ஸ்பெயினுக்கு திரும்பி வரும் போது நிறைய பொருள்களை எடுத்து வந்தார். அதில் சர்க்கரை வள்ளியும் ஒன்று. ஸ்பானியர்களுக்கு இது மிகவும் பிடித்துப் போகவே பயிரிட ஆரம்பித்தனர். அங்கிருந்து கிழக்கே போன மாலுமிகள் இதை ஆசியாவுக்குக் கொண்டு சென்றனர். அமெரிக்கப் புரட்சியின்போது சிப்பாய்களுக்கு முக்கிய உணவாக சர்க்கரை வள்ளிக்கிழங்கு தரப்பட்டது. எட்டாம் ஹென்றி காலத்தில் இங்கிலாந்தில் இது பிரபலமாகியது. பதினாறாம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியர்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தினர்.
சர்க்கரை வள்ளிக்கிழங்கை பயிரிட சூடான, ஈரப்பதமான சீதோஷ்ண நிலை தேவைப்படுவதால் ஐரோப்பாவில் அவ்வளவு பிரபலமாகவில்லை. இந்தியா, சீனா, கிழக்கிந்தியத் தீவுகளில் அதிகமாக விளைகிறது. இப்போது ஜப்பானிலும் பரவலாக விளைவிக்கப்படுகிறது. தெற்கு ஜப்பான் தீவுகளில் காரா கிமோ என்றும், வட ஜப்பானில் ஸாட்ஜூமா-இமோ (ஜப்பானிய உருளைக்கிழங்கு) என்றும் அழைக்கிறார்கள்.
வகைகள்: முக்கியமான இரண்டு வகைகள் உள்ளன.
1. நீளமாக இளம் மஞ்சள் தோலுடன் அல்லது சிவப்புத் தோலுடன் உள்ளே வெள்ளையாக ஒரு வகை. இதன் உள்சதை காய்ந்தாற் போல இருந்தாலும் நீர் அளவு இவற்றில் மிக அதிகம்.
2. வெளியில் சிவப்புத் தோலுடன் உள்ளே ஆரஞ்சு வண்ண சதையுடன் கூடியது. இது கொஞ்சம் மிருதுவாக ஈரப்பதத்துடன் காணப்பட்டாலும் நீர் அளவு குறைவு. உள்ளே பார்ப்பதற்கு ஆரஞ்சு நிறத்தில் இருப்பதால் அமெரிக்காவில் இதைத் தவறாக (சேனைக்கிழங்கு) என்கின்றனர். உண்மையில் சேனைக்கும் இதற்கும் தொடர்பில்லை. இந்த வகை இந்தியாவில் அரிது. அமெரிக்கர்கள் விரும்புவது இந்த ஆரஞ்சு சதை கொண்டதைத்தான். ஏனெனில் விட்டமின் 'ஏ' இதில் அதிகம்.
இதைத் தவிர ஊதாக்கலர் சதையுடனும் கிடைக்கிறது. நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடைபெறும் நன்றி அறிவித்தல் (தேங்க்ஸ் கிவ்விங்க்) பண்டிகையின் போது இந்த வகை சர்க்கரை வள்ளிக்கிழங்கின் சீஸனாகும். நம்மூர்களில் பொங்கல் (ஜனவரி) மாதம் சீஸன்.
தேர்ந்தெடுப்பது: கையில் எடுத்தால் கனமாகக் கெட்டியாக இருக்க வேண்டும். தோல் புள்ளி எதுவும் இல்லாமல் சுத்தமாக இருக்க வேண்டும். நுனியில் சுருங்கி இருந்தால் பழசு. அழுகத் தொடங்கிய பகுதியை வெட்டி எறிந்தால் கூட அதன் வாசனை மற்ற இடங்களுக்குப் பரவி இருக்கும். வெளித்தோல் கொஞ்சம் கறுத்திருந்தாலும் கெட்டுப் போய் இதனடியில் உள்ள சதையும் கறுப்பாக மாறியிருக்கும். வாங்கியதும் மண் படிந்திருந்தால் தோலை அலம்பக் கூடாது. ஈரம், கிழங்கை சீக்கிரம் கெடுத்துவிடும். உபயோகிக்கும் முன் சுத்தம் செய்தால் போதும்.
பாதுகாத்தல்: சீக்கிரம் பயன்படுத்தி விடவேண்டிய காய்கறி இது. ஃப்ரிஜ்ஜில் வைத்தால் காய்ந்து போய் ருசியும் குறைந்துவிடும்.
உணவுச்சத்து: அதிகமான உணவுச்சத்து நிறைந்தது. சமைப்பது சுலபம். ஒருவித இனிப்புடன் ருசி பிரமாதமாக இருக்கும். பச்சையாகவும் சாப்பிடலாம். வேக வைத்து, சுட்டு, வதக்கி, பொரித்து என்று பல வகைகளில் சமைத்து சாப்பிடலாம். சர்க்கரை வள்ளிக்கிழங்கின் தோலும் சாப்பிடக் கூடியது. இதில் நிறைய நார்ச்சத்து உள்ளதால் உரிக்காமல் சாப்பிடுவது நல்லது.
ஒரு மீடியம் சைஸ் சர்க்கரை வள்ளிக்கிழங்கில் இருக்கும் உணவுச்சத்து: கலோரி 130, கொழுப்புச்சத்து 0.39 கிராம், புரோட்டின் 2.15 கிராம், கார்போ ஹைட்ரேட் 31.56 கிராம், நார்ச்சத்து 3.9 கிராம், சோடியம் 16.9 மில்லிகிராம், பொட்டாசியம் 265.2 மில்லி கிராம், கால்சியம் 28.6 மில்லி கிராம், விட்டமின் சி 29.51 மில்லி கிராம், விட்டமின் ஏ-26081 IU.
சமையல் வகைகள்:
சாலட், ஜூஸ், சூப்: சர்க்கரை வள்ளிக்கிழங்கைப் பச்சையாகவே துருவி சாலட்டில் சேர்த்தால் ருசியோடு விட்டமின் 'ஏ' சத்தும் நேரடியாக கிடைக்கும். ஜூஸாக அரைத்து பச்சையாக சூப்பில் சேர்க்கலாம். ஆரஞ்சு வண்ணக் கிழங்கைத் துருவி சேர்த்தால் சாலட், சூப் சமையல் வகைக்கு வண்ணம் சேர்ப்பதோடு காரட் போல காட்சியளிக்கும். சர்க்கரை வள்ளிக்கிழங்கை சமைக்க அதிக எண்ணெய் தேவைப்படாது. வதக்கினாலும் எண்ணெய் குறைந்த அளவே இழுக்கும். சர்க்கரை வள்ளிக்கிழங்கின் வாசனையை அதிகமாக்க துண்டு போட்டு கொஞ்சம் ஆப்பிள் ஜூஸ் சேர்த்து குறைந்த தீயில் சமைத்தால் ருசியும், பளபளப்பும் வரும்.
பாயசம்: இதற்கு சர்க்கரை குறைவாக பயன்படுத்தினாலே போதும். சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேக வைத்து தோலுரித்துக் கொள்ளவும். பின்பு அதை நன்றாக மசிக்கவும். பாலை சுண்டக்காய்ச்சி, அதில் மசித்த கிழங்கை சேர்த்து கொதிக்க வைக்கவும். ஏலப்பொடி, குங்குமப்பூ, முந்திரி பருப்பு, உலர்ந்த திராட்சையை நெய்யில் வறுத்துப் போடவும்.

கண்களை பாதிக்கும் பொதுவான கண் நோய்கள் யாவை?

1) கண்களை பாதிக்கும் சில காரணிகள்:

க்ளைகோமா, தூரப்பார்வை,கிட்டப்பார்வை ,ஸ்டை (ஸ்டை என்பது கண்ணீர் சுரப்பியை தடுக்கும் கண்ணின் மேற்புறத்தில் தோன்றும் ஒரு தொற்று ஆகும்) கட்டிகள், தொற்றுகள் கண்புரை உலர்ந்த கண்

2) கண் பாதிப்புகளை தெரிவிக்கும் எச்சரிக்கை அறிகுறிகள் யாவை?

இருளில் பார்வையை சரிபடுத்துதலில் சிரமம்,இரட்டை தோற்றம்,சிவந்த விழிகள்,கண் எரிச்சல் மற்றும் வீக்கம்,கண் மற்றும் கண்களை சுற்றி வலி,அதிகப்படியான கண்ணீர் சுரத்தல்,கண் உலர்ந்து போதல், அரிப்பு மற்றும் எரிச்சல்,தெளிவில்லாத பார்வை திறன்,காணும் காட்சியின் மத்தியில் கருப்பு புள்ளி தோன்றுதல்,கண்களின் நிறங்களில் தோன்றும் நிற மாற்றம், பார்வை திடீரென்று தெளிவில்லாமல் மேலும் குழப்பத்துடன் தோன்றுதல்

3) சிமிட்டுதல் கண்களுக்கு உதவுமா?

சிமிட்டுதல் விழி உருளைகளை கண்ணீரால் கழுவ மட்டும் உதவுகிறது. அவை கண்களை சுத்தமாகவும், ஈரப்பதமாகவும் வைத்திருக்க உதவுகிறது. யாரேனும் நம் கண்களை குத்தினால் நாம் அனிச்சையாக நம் கண்கனை சிமிட்டுவோம்.

4) ஒரு வருடத்தில் நாம் எத்தனை முறை கண்களை சிமிட்டுகிறோம்?

வருடத்திற்கு 10,00,000 முறை. உண்மையில் நம் உடலின் அனைத்து தசைகளை விட கண்களின் தசை விரைந்து செயல்படுகிறது. ஒரு நிமிடத்தின் 1/00 னை விட குறைவான கால அளவில் சுருங்குகிறது. வருடத்திற்கு 10,00,000 முறை. உண்மையில் நம் உடலின் அனைத்து தசைகளை விட கண்களின் தசை விரைந்து செயல்படுகிறது. ஒரு நிமிடத்தின் 1/00 னை விட குறைவான கால அளவில் சுருங்குகிறது.

5) காதில் தங்க வளையம் அணிவது கண்பார்வை திறனை மேம்படுத்துமா?

இது ஒரு கட்டுக்கதை. காதில் தங்க வளையம் அணிவதால் கண்பார்வை மேம்படும் என்பதுமூட நம்பிக்கையாளர்களின் எண்ணம்.

6) மிகவும் இறுக்கமாக கழுத்துப்பட்டை அணிவது கண்களை பாதிக்குமா?

இறுக்கமாக கழுத்துப்பட்டை அணிவது க்ளைகோமா தோன்றும் வாய்ப்பினை அதிகப்படுத்தும்என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

7) மங்கிய விளக்கொளியில் படிப்பது கண்களுக்கு கேடு விளைவிக்குமா?

மங்கிய விளக்கொளி தங்கள் பார்வைத்திறனை பாதிக்காது என்றபோதும், அது உங்கள் கண்களை அதிக தளர்வடையச் செய்யும். படிப்பதற்கான சிறந்த வழியானது விளக்கின் ஒளி புத்தகத்தின் பக்கங்களில் விழும்படி படிக்க வேண்டும், உங்கள் தோள்களின் மீது விழும்படி படிக்க கூடாது.

8) எனது கண்களுக்கான சிறந்த உணவு எது?

பழைய பரிந்துரையான காரட் சிறந்த உணவு என்பது உண்மையாகும். கண்புரை மற்றும் மாசு சீர்கேட்டினை தடுப்பதற்கு நம் கண்களில் இயற்கையாக அமைந்துள்ள காரடெனோய்ட்ஸ் லூய்டின் மற்றும் ஜியாக்சேன்தின் போன்ற பொருட்கள் காரட்டில் உள்ளது.

9) எனது கண்களுக்கான சிறந்த பழங்கள் யாவை?

பப்பாளி, ஸ்ட்ராபெரி, ஆரஞ்சு மற்றும் திராட்சை போன்ற பழங்கள் சிறந்தது.

10) பிறந்த குழந்தையின் அழுகையில் கண்ணீர் வருவதில்லையே ஏன்?

தோராயமாக ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகளின் கண்கள் கண்ணீரை சுரப்பதில்லை.

முதுமையில் உண்டாகும் நோயின் தன்மையை அவரைப் பிஞ்சு மாற்றும். தசை நார்களை வலுப்படுத்தும்.


இயற்கையுடன் இணைந்து வாழும் மனிதன் தன் இருப்பிடத்தைச் சுற்றி அதாவது வீட்டைச் சுற்றி தோட்டம் அமைத்தான். அதில் தமக்குத் தேவையான செடி, கொடி, மரங்களை நட்டு வைத்தான். அதிலிருந்து கிடைக்கும் பூ, இலை, காய், கனி அனைத்தையும் உண்டான். தன்னை வளர்த்து ஆளாக்கிய மனிதன் என்ற எஜமானுக்கு இவை நீண்ட ஆயுளை நன்றிக்கடனாக கொடுத்து வந்தன.
ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் முன்னோர்கள் பருவ கால சூழ்நிலைக்கேற்ப எந்த வகையான உணவுகளை சாப்பிடவேண்டும், அதை எப்படிச் சாப்பிடவேண்டும் என்பதை தெளிவாக எடுத்துரைத்துள்ளனர். அதன்படி வீட்டைச் சுற்றி மனிதனுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் தரும் கீரைகள், மரங்களை நட்டு வளர்த்தனர். ஆனால் இன்று வீடுகளைச் சுற்றி காங்கிரீட் தளங்கள், குரோட்டன்ஸ் என்று சொல்லப்படும் எதற்கும் உதவாத நச்சுச் செடிகள், அல்லது பிளாஸ்டிக் அலங்காரப் பொருட்கள்தான் உள்ளன. இதனால் வீட்டுத் தோட்டக் காய்கள் எதுவென்று நம் எதிர்கால சந்ததியினர்களுக்குத் தெரியாமல் போகும் நிலை உள்ளது.
இன்று காய்கறிகள், கனிகள் கீரைகள் எல்லாம் இரசாயன உரமிட்டு வளர்க்கப்பட்டு சந்தைகளில் விற்கப்படுகிறது. அவை சில நேரங்களில் உடலில் நச்சுத்தன்மையை உண்டாக்குகிறது.
ஆனால் இவைகளை நம் ஒவ்வொரு வீட்டிலும் வீட்டுக் கழிவுகளை உரமாக இட்டு வளர்த்தால் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம்.
அந்த வகையில் வீடுகளில் எளிதாக வளர்க்கப்படும் அவரைக்காய் பற்றி தெரிந்து கொள்வோம்.
அவரை கொடி வகையைச் சேர்ந்தது. குறிப்பாக தென்னிந்தியாவில் வீடுகள்தோறும் பயிரிடப்படும் செடியாகும். இன்றும் கிராமப்புறங்களில் வீட்டின் கொல்லைப் புறத்தில் அவரை பயிரிடப் படுவதைக் காணலாம். ஆடி மாதம் விதை விதைத்தால் அதன் பயன் தை மாதத்தில்தான் கிடைக்கும். இது கொடியாக வளர்ந்து காய் காய்ப்பதற்கு ஆறு-மாத காலமாகும். இந்த அவரைக் கொடிக்கு அழகான பந்தல் போடுவார்கள். அந்த பந்தலின் மேல் இந்த கொடி படர்ந்து காணப்படும். அவரைக்காயில் பிஞ்சுக்காயே அதிக அளவில் உணவாகச் சேர்க்கப்படுகிறது. நல்ல சுவையைக் கொண்டது.
அவரைப் பிஞ்சுகளை எடுத்து நறுக்கி அதனுடன் சின்னவெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து வதக்கி உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் வலுப்பெறும். எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்டதால் இதன் சத்துக்கள் விரைவில் உடலில் சேரும். இதில் சுண்ணாம்புச்சத்து, வைட்டமின்கள் இருப்பதால் இளைத்த உடல் தேறும்.
நோய்க்கு மருந்துண்ணும் காலங்களிலும், விரதம் இருக்கும் காலங்களிலும் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். இது உடலுக்கு வலுவைக் கொடுப்பதுடன் விரத மன அமைதியைப் பெருக்கவும் உதவும். சிந்தனையைத் தெளிவுபடுத்தும்.
காமச்சிந்தனை, அதீத சிந்தனை, கோபம், எரிச்சல், இவற்றைப் போக்கும். உடலுக்கும், மனதிற்கும் சாந்தத்தைக் கொடுக்க வல்லது.

பித்தத்தினால் உண்டாகும் கண்சூடு, கண்பார்வை மங்கல் போன்ற கண் பாதிப்புகளுக்கு அவரைக்காய் பிஞ்சு வாரம் இருமுறை சமைத்து உண்டுவந்தால் பித்தம் குறைந்து கண் நரம்புகள் குளிர்ச்சியடைந்து மங்கிய பார்வை தெளிவடையும். அவரைக்காயை அதிகம் உண்டுவந்தால் வெள்ளெழுத்து குறைபாடுகள் நீங்கும்.
அவரைப் பிஞ்சில் துவர்ப்புச் சுவை உள்ளதால் இது இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்த நாளங்களில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். இரத்த அழுத்தம், இதயநோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது.
அதுபோல் சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொண்டால், நீரிழிவு நோயால் உண்டாகும் மயக்கம், தலைச்சுற்றல், கை, கால் மரத்துப்போதல் போன்றவை மட்டுப்படும்.
· மலச்சிக்கலைப் போக்கும், வயிற்றுப் பொருமலை நீக்கும்.
· மூலநோய் தாக்கம் உள்ளவர்கள் அவரைக்காயை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது.
· சிறுநீரைப் பெருக்கும்
· சளி, இருமலைப் போக்கும்
· உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும்
· சருமத்தில் உண்டாகும் பாதிப்புகளைக் குறைக்கும்
· இரவு உணவில் அவரைக்காய் சேர்த்துக் கொண்டால் சுகமான நித்திரை கிடைக்கும்.
முற்றிய அவரைக்காயை உணவாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக முற்றிய அவரைக்காய், முற்றிய வெண்டைக்காய் போன்றவற்றை சேர்த்து சூப் செய்து அருந்தினால் உடல் பலமடையும். ஆண்மை சக்தி அதிகரிக்கும். நினைவாற்றலைத் தூண்டும்.
முதுமையில் உண்டாகும் நோயின் தன்மையை அவரைப் பிஞ்சு மாற்றும். தசை நார்களை வலுப்படுத்தும்.

கொலஸ்ட்ராலைக் குறைக்கும் வெண்டைக்காய்!

 
வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளைக்கு போஷாக்கு என்று இந்தியர்களுக்கு தீவிர நம்பிக்கை. இது பருத்திச் செடியின் குடும்பத்தை சேர்ந்தது. தாவரவியல்படி செம்பருத்தி ஹாலிஹாக் என்னும் பூச்செடி வகை. இந்த பூக்களின் அமைப்பும் வெண்டைக்காய் பூவின் அமைப்பும் ஒரே மாதிரியானவை. வெண்டைக்காய்க்கு வெப்பம் அதிகமுள்ள நிலமும் பகல் இரவு இரண்டிலும் சூடான சூழ்நிலையும் அவசியம். இதனால் இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் விளைச்சல் அதிகம்.
வரலாறு:
வெண்டைக்காயின் பூர்வீகம் எத்தியோப்பியா நாடு. அங்கிருந்து அரேபியா, நைல்நதியோர நாடுகள், பிறகு இந்தியா என்று அடுத்தடுத்து அறிமுகமாகி இருக்கிறது. கி.பி 1600-களில் அடிமை வியாபாரம் தொடங்கிய காலகட்டத்தில் ஆப்ரிக்க அடிமைகள் இதை அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேலைநாடுகளுக்கு எடுத்துச் சென்றனர். ஆப்ரிக்கர்கள் கம்போ என்ற ஒரு பிரபல சூப் தயாரிக்கையில் சூப் கெட்டியாவதற்காக வெண்டைக்காயை உபயோகித்து வந்தனர். வெண்டைக்காயை பொடி செய்து சூப்பில் சேர்ப்பார்கள். ஆப்ரிக்க பாஷைகளில் ஒன்றான ஸ்வாஹிலியில் கம்போ என்றால் வெண்டைக்காய் என்று அர்த்தம். ஓக்ரா என்ற இன்னொரு பெயரும் உண்டு. இளசாக இருக்கும் வெண்டை மென்மையாகவும் நீளமாகவும் நுனி கூராகவும் இருப்பதால் ஆங்கிலத்தில் இதை பெண்ணின் விரல் (Ladies finger) என்கிறார்கள்.
வெகுநாட்கள் வரை இதை எப்படி சமைப்பது என்று தெரியாமலே யாரும் பயன்படுத்தவில்லை. அந்த காலத்தில் விவசாயிகளும் இதை செடியிலேயே முற்ற விட்டதால் அதை பயன்படுத்திய ஒருசிலரும் முற்றிய வெண்டைக்காயின் ருசி பிடிக்காமல் அதை வெறுத்தனர்.
வகைகள்:
இளம் பச்சை, கரும் பச்சை, சிவப்பு நிறங்களில் இருக்கும். நீளம், குட்டை, உருண்டை வடிவங்கள் உண்டு.
விசேஷ குணம்:
வெண்டையின் மிக முக்கியமான விசேஷ குணம் கொழகொழப்புதான். இதிலுள்ள Acetylated Galeturomic அமிலங்கள் கொழகொழப்பை ஏற்படுத்துகின்றன. வெண்டைக்காயை நறுக்கும்போது இந்த அமிலங்கள் வெளியே வந்து கொழகொழக்கிறது.
வாங்குவது எப்படி?:
இளசாக இருக்கும் போதே பறித்துவிட வேண்டும். பயிரிடுவோர் தினமும் அறுவடை செய்ய வேண்டும். பறித்த பிறகுகூட முற்றிவிடும் வகையை சேர்ந்தது. சீக்கிரமே மரம் போல் முற்றி விடும். வாங்கியவுடன் சமைக்க வேண்டும். வெண்டைக்காயினுள் புழு இருக்கலாம். காம்புக்கு அருகில் ஓட்டை இல்லாததாக பார்த்து வாங்க வேண்டும். ஓட்டை இருந்தால் புழு இருக்கும்.
பாதுகாப்பு:
ஃப்ரிஜ்ஜில் வைப்பதானால் கழுவாமல், லூஸாக பிளாஸ்டிக் பையில் போட்டு காய்கறி ட்ரேயில் வைக்கவும். ஃப்ரிஜ்ஜில் வைக்கும்போது துளி கூட ஈரம் இருக்கக் கூடாது. ஈரம் இருந்தால் வெண்டைக்காய் அழுகி கொசகொசத்து பூசணம் பூத்துவிடும். சமைப்பதற்கு முன்தான் அலம்ப வேண்டும். சில வகை வெண்டைக்காயில் மெல்லிய பூனைமுடி போல இருக்கும். நன்றாக தேய்த்துக் கழுவி பேப்பர் டவலில் துடைத்துவிட்டு நறுக்கவும். நறுக்கி தண்ணீரில் போடக்கூடாது. அதிலிருக்கும் ஒருவித சளி போன்ற கொழ கொழப்பான திரவம் வெளியேறி சமையலே கெட்டு விடும்.
சமைக்கும் போது கவனிக்க:
இன்று வெண்டைக்காய் சாம்பார் இல்லாத வீடுகளே இல்லை என்று கூறலாம். சூப், ஊறுகாய், குழம்பு என்று வெண்டைக்காயை வைத்து செய்யப்படும் உணவு வகைகளின் பட்டியல் மிகப் பெரியது. வெண்டைக்காயை சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கி, வெயிலில் காய வைத்து, எண்ணெயில் பொறித்து வடகமாக சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
வெண்டைக்காயின் கொண்டைப்பகுதியை வெட்டி தோசை மாவு அரைக்கும்போது சேர்த்தால் தோசை மிருதுவாக வரும்.
வெண்டைக்காயை துண்டாக வெட்டி நறுக்கும் போது அதிலிருக்கும் கொழ கொழப்பு மொத்தையாக்கி சரியாக வதங்காது. அதனால் கொழகொழப்பு நீங்க எலுமிச்சை சாறு, அல்லது தயிரை சிறிதளவு விட்டு வதக்கலாம்.
மிக மிக பொடியாக வெட்டி நறுக்கினாலும் கொழ கொழப்பு அவ்வளவாக இருக்காது. வெண்டைக்காயை தக்காளி, வெங்காயம், சோளம், மீன், உருளைக்கிழங்கு ஆகியவற்றுடன் சேர்த்து சமைக்கும்போது அவை மிகவும் ருசியாக இருக்கும்.
மற்ற காய்கறிகளோடு சேர்த்து சமைக்கும் போது வெண்டைக்காயை அதன் கொழகொழப்பு வராமல் தனியாக வதக்கி கடைசியில் சேர்க்க வேண்டும். இரும்பு, அலுமினிய பாத்திரங்களில் சமைத்தால் கறுத்துவிடும். தக்காளியின் புளிப்புத் தன்மை வெண்டைக்காயின் கொழகொழப்பை முறியடிக்கும்.
வெளிநாட்டில் வெண்டைக்காயை மெலிதாக நறுக்கி வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் இவற்றோடு சேர்த்து ஸாலட்டாகத்தான் சாப்பிடுவார்கள். தனியாக சமைத்து சாப்பிடுவதில்லை. வங்காளத்தில் முற்றிய வெண்டையை உறித்து கொட்டையை சாப்பிடுவார்கள்.
இளசான வெண்டைக்காயை துண்டாக்கி முட்டையில் தோய்த்து ரொட்டித் தூள் அல்லது சோளமாவில் புரட்டி எண்ணெயில் பொரித்தெடுத்து சாப்பிடுவது அமெரிக்காவில் பிரபலம். முற்றிய காயை பேப்பர் செய்யவும் கயிறு செய்யவும் பயன்படுத்துகிறார்கள்.
உணவுச் சத்து:
பாதி கரையும் நார்ச்சத்து, பாதி கரையாத நார்ச்சத்துக்கள் இதில் உள்ளன. கரையும் நார்ச்சத்து உடலிலுள்ள கொலஸ்ட்ராலை குறைக்கிறது. இதனால் மாரடைப்பு போன்ற இருதய நோய்கள் வராமல் தடுக்கிறது. கரையாத நார்ச்சத்து குடலுக்கு திடத்தை கொடுத்து குடல் அழற்சி, குடல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
ஒரு கப் சமைத்த வெண்டைக்காயில் இருக்கும் உணவுச் சத்துகளின் அளவு:
கலோரி 25, நார்ச்சத்து - 2 கிராம், புரோட்டின் 1.52 கிராம், கார்போஹைட்ரேட் 5.76 கிராம், விட்டமின் ஏ 460 IU, விட்டமின் சி 13.04 மில்லி கிராம், ஃபாலிக் ஆசிட் - 36.5 மைக்ரோ கிராம், கால்சியம் 50.4 மில்லி கிராம், இரும்புச் சத்து 0.4 மில்லி கிராம், பொட்டாசியம் 256.6 மில்லி கிராம், மெக்னீசியம் - 46 மில்லி கிராம்.
வெண்டைக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டு வரும் இளம் பெண்களுக்கு ஆப்பிள் பழம் போல அழகிய கன்னங்கள் உண்டாகும். மேலும், புஷ்டியான முகத்துடன் பளபளவென்று மின்னுவார்கள்.
வெண்டைக்காய் வேரை இடித்துப் பொடியாக்கி அதை இரவு உணவிற்குப் பின் பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும். 10 கிராம் பொடியை 10 கிராம் அளவுள்ள நெய் மற்றும் தேனில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்குத் தாது பலம் ஏற்படும்.
வெண்டைக்காயில் ஏ, பி மற்றும் சி ஆகிய வைட்டமின்கள் இருக்கின்றன. குடல் புண்ணால் ஏற்படும் வயிற்று வலிக்கு வெண்டைக்காய் ஒரு சிறந்த மருந்து. பண்டைய காலத்தில் லேசான காயம், நீர்க்கட்டு, பரு போன்ற பிரச்சினைகளுக்கு வெண்டைக்காய்ச் செடியின் இலைகளை அரைத்து மருந்தாகப் பயன்படுத்தினர்.
வயிற்றுப் போக்கைக் கட்டுப்படுத்தும் தன்மையும் வெண்டைக்காய்க்கு உண்டு. சீசனில் விலை குறைவாக இருக்கும்போது நிறைய வெண்டைக்காயை வாங்கி, காய வைத்து தேவைப்படும்போது சூப் தயாரித்துக் குடித்து மகிழலாம். வீட்டிலேயே சிறிய தோட்டம் அமைத்து இயற்கை முறையில் வெண்டைக்காயைப் பயிரிட்டால் அதன் சுவை அதிகமாக இருக்கும். இத்தனை மகிமை வாய்ந்த வெண்டைக்காயை அளவோடு சாப்பிட்டு வந்தால் வளமாக வாழலாம்.

Friday, July 8, 2011

இஸ்லாமிய தமிழிலக்கிய 15ஆவது மாநாடு: இன்று துவக்க விழா! காயல்பட்டினத்தில் விழாக்கோலம்!

இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகத்தின் சார்பில், இஸ்லாமிய தமிழிலக்கிய 15ஆவது மாநாடு ஜூலை மாதம் 08, 09, 10 தேதிகளில் காயல்பட்டினத்தில் நடைபெறவுள்ளது.

இம்மாநாட்டில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய கண்காட்சி, கருத்தரங்கம், பட்டிமன்றம், கவிதையரங்கம் என பலவும் இடம்பெறவுள்ளன. முக்கிய தலைப்புகளில் ஆய்வுக்கட்டுரைகளும் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

இன்று துவங்கவுள்ள இம்மாநாட்டிற்காக காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் அலங்காரப் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. ஆயத்தப்பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.
எல்.எஃப்.ரோட்டில் துவங்கி, நகரின் பிரதான வீதி, திருச்செந்தூர் சாலையில் கே.எம்.டி.மருத்துவமனை வரை குழல் விளக்குகள் நிறுவப்பட்டுள்ளன. ஊரின் நுழைவுப் பகுதிகளில் வரவேற்பு வளைவுகளும் நிறுவப்பட்டுள்ளன. மக்கள் திரள் அதிகமிருக்கும் பகுதிகளில் மாநாட்டு நிகழ்ச்சிகளை விளம்பரப்படுத்தும் பதாகைகள் நிறுவப்பட்டுள்ளன.
இலங்கையிலிருந்தும், தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் பார்வையாளர்களும், சிறப்பு அழைப்பாளர்களும் வந்து குவிந்தவண்ணம் உள்ளனர்.
பேராளர் பதிவு:
துவக்கமாக, இன்று காலை 10 மணிக்கு பேராளர் பதிவும், வரவேற்பும் காயல்பட்டினம் திருச்செந்தூர் சாலையிலுள்ள வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.

துவக்க விழா:
மாநாட்டு துவக்க விழா இன்று மாலை 04.30 மணிக்கு காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க வளாகத்தில், வரகவி காசிம் புலவர் பந்தலில், வள்ளல் சீதக்காதி நுழைவாயிலில், சதக்கத்துல்லாஹ் அப்பா அரங்கத்தில் நடைபெறுகிறது.

மாநாட்டு ஏற்பாட்டுக் குழு தலைவரும், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவருமான ஹாஜி எம்.எம்.உவைஸ் துவக்க விழாவிற்குத் தலைமை தாங்குகிறார். நகர பிரமுகர்கள் முன்னிலை வகிக்கின்றனர்.

இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகத்தின் பொதுச் செயலாளர் பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் வரவேற்புரையாற்றுகிறார்.

அதனைத் தொடர்ந்து, மவ்லானா ஜலாலுத்தீன் ரூமி அவர்களின் “மஸ்னவீ ஷரீஃப்” தமிழாக்க நூல் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அதனைத் தொடர்ந்து, இலங்கை நீதித்துறை அமைச்சர் ரவூஃப் ஹக்கீம் மாநாட்டைத் துவக்கி வைக்கிறார். வேலூர் பாராளுமன்றத் தொகுதி உறுப்பினர் எம்.அப்துர்ரஹ்மான் எம்.பி வாழ்த்துரை வழங்குகிறார்.

கவியரங்கம்:
இன்றிரவு 07.00 மணிக்கு பேராசிரியர் ஈரோடு தமிழன்பன் தலைமையில் “ஊடகம்” என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெறுகிறது. துவக்கமாக, இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகத்தின் தலைவர் வடக்கு கோட்டையார் வ.மு.செய்யது அஹமது வரவேற்புக் கவிதை வழங்குகிறார்.

பின்னர் நடைபெறும் கவியரங்கத்தில், தமிழகத்தின் தலைசிறந்த கவிஞர்கள் கலந்துகொண்டு கவிதைகள் படைக்கின்றனர்.

இஸ்லாமிய பாடல் அரங்கம்:
துவக்க விழா நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, பாவலர் எஸ்.எஸ்.அப்துல் காதிர் அரங்கத்தில், இன்றிரவு 09.00 மணி முதல் 10.00 மணி வரை இஸ்லாமிய பாடல் அரங்கம் கவிஞர் ஹாஜி எஸ்.செய்யது அஹ்மது தலைமையில் நடைபெறுகிறது.

ஆழ்வை எம்.ஏ.உஸ்மான் குழுவினரும், நெல்லை அபூபக்கர் குழுவினரும் இவ்வரங்கில் இஸ்லாமிய பாடல்களை இசைக்கவுள்ளனர்.

முதல் நாள் துவக்க விழா நிகழ்ச்சிகளனைத்தையும், மாநாட்டு ஏற்பாட்டுக் குழு பொதுச் செயலாளர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் நெறிப்படுத்துகிறார்.

மாநாட்டுக்கான பிரத்தியேக இணையத்தளம் காண www.kayalitlc.org