Monday, September 26, 2011

பத்து பேரில் ஒருத்தராவது கெட்டுப்போகாமல் இருக்க வேண்டுமே...




தமிழகரசு பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அனைவருக்கும் இலவசமாக லேப்டாப்(மடிக்கணினி)வழங்கி வருகிறது.

மாணவர்கள் கையில் இருக்கும் மடிக்கணினிகள் கல்வி வளர்ச்சிக்காக மட்டுமே பயன்பட வேண்டும் என்பதே நம் கனவு, இந்தக்கனவு மெய்ப்பட்டால், மாணவர்களின் அறிவும்,படிப்பிலுள்ள ஈடுபாடும் மேலும் வளர மடிக்கணினிகள் காரணமாக இருக்கும் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.

நாளை மடிக்கணினிகளால் மாணவர்கள் அதிக மதிப்பெண்களைப் பெற்றார்கள், ஈடுபாட்டோடு படித்தார்கள் என்ற செய்தியைதான் நாம் கேள்விப்பட வேண்டும், ஆகவே பாதுகாப்பான மடிக்கணினிகளை வழங்கும் வரையிலும் அதைப்பற்றி வலியுறுத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.பத்து பேரில் ஒருத்தராவது கெட்டுப்போகாமல் இருக்க வேண்டுமே என்ற நல்லெண்ணத்தில்.

இன்றைய மாணவர்கள் மிகவும் புத்திசாலிகள், அவர்களின் அறிவும், திறமையும் மேலும் வளர்ந்து நல்ல பாதையை வகுத்துக்கொள்ளவே தமிழக அரசு மடிக்கணினிகளை வழங்குகிறது. ஆனால் மிக மோசமான அதன் மறுபக்க விளைவுகளை பற்றி பலர் யோசிக்கவில்லை, இந்த பதிவு மக்களை யோசிக்க வைக்கவேண்டும் என்ற உந்துதலில் எழுதலானேன்.

மடிக்கணினி மூலம் பல விதங்களில் மாணவர்கள் தவறான வழிகளில் சென்று விட அதிக வாய்ப்புள்ளது.வருங்கால இந்தியா இளைஞர்களின் கையிலதான் இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.இளைஞர்களை கெடுக்கும் முக்கிய ஆயுதங்களான போதைப்பொருட்கள்,ஆபாசம் இவ்விரண்டையும் முழுவதும் தடுக்க முடியாவிட்டாலும் ஓரளவாவது தடை செய்வதன் மூலம் ஏற்படும் பாதிப்பை குறைக்க முடியும். தொலைக்காட்சி மூலம் ஆபாச நிகழ்ச்சிகளும் இணையத்தில் வாயிலாக ஆபாச படம் பார்ப்பவர்களின் எண்ணிகையும் பத்து மடங்காக அதிகரித்துள்ளது மேலும் அதிகரிக்கக்கூடும் என அதிகாரப்பூரவமான தகவல்கள் தெரிவிக்கின்றன்.இனி பள்ளி மாணவர்கள் கையிலும், கல்லூரி மாணவர்கள் கையிலும் மடிக்கணினி கிடைத்தால் எந்த அளவிற்கு மாணவர்களின் அறிவு வளருமோ அதே அளவிற்கு தவறு நடப்பதும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.உதாரணமாக நாம் கூகிள் தளத்தில் சென்று ஏதாவது ஒரு தமிழ் வார்த்தையை தட்டச்சு செய்தால் அது ஆபாச வார்த்தயை நமக்கு காட்டுகிறது அதைச் சொடுக்கி அவர்கள் தவறான தளத்திற்கு செல்லும் வாய்ப்பு அதிகமதிகம் அதற்காக இண்டெர்நெட் வேண்டாம் என்றால் அது முட்டாள்தனமான முடிவாகதான் இருக்கமுடியும்.இதைத்தடுக்க அரசிடமாவது சொல்லி இலவசமாக கொடுக்கும் மடிக்கணினியில் சில மாற்றங்கள் செய்வதன் மூலமும் குற்றங்கள் செய்யக்கூடிய சுழ்நிலையை தவிர்ப்பதன் மூலமும் பெருமளவு குற்றங்கள் நடைபெறாமல் இருக்கவும் மிக பாதுகாப்பான லேப்டாப்பினை மாணவர்களுக்கு தர வழி வகுக்கும்.

ஆபாச தளங்கள் எக்காரணத்தை கொண்டும் அரசு கொடுக்கும் லேப்டாப்பில் தெரியக்கூடாது.

இதற்காக கணினியுடன் கூடிய ஆபாசதள தடுப்பு மென்பொருள் சேர்ந்தே அமைந்திருக்க் வேண்டும்.( Uninstall,Delete செய்ய முடியாத வண்ணமிருக்க வேண்டும்).

சமூக வலைதளங்களான பேஸ்புக், டிவிட்டர், ஆர்குட் போன்ற வலைதளங்களை பயன்படுத்த முடியாத வண்ணமிருக்க வேண்டும்.

வைரஸ் பாதுகாப்பு மென்பொருள் அவ்வப்போது தானாகவே அப்டேட் செய்யும் வண்ணம் அமைந்திருக்க வேண்டும்.

Hacking Software, மற்றும் போலியான மென்பொருட்கள் கணினியில் இன்ஸ்டால் செய்ய முடியாதபடி அமைந்திருக்க வேண்டும்.


கூகிள் தளம் இல்லை என்றால் இணையமே இல்லை என்று சொல்லும் நமக்கு சீனா ஒரு முன் உதாரணம் தான், அந்த நாட்டில் இளைஞர்கள் இணையதளம் மூலம் எந்த வழியிலும் தவறாக சென்று விடக்கூடாது என்பதற்காக ஆபாச தளங்களை காட்டியதற்காக கூகிள், யூடியுப், பேஸ்புக் போன்ற சமுகத்தை சிரழிக்கும் வலைத்தளங்கள் சீனாவில் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த பதிவின் முக்கியத்துவம் பற்றி நம்மனைவருக்கும் தெரிந்திருக்கும்.அரசு கொடுக்க இருக்கும் இலவச மடிக்கணினிகளில் இங்கு குறிப்பிட்டிருக்கும் பாதுகாப்பு அம்சம் இருந்தால் மட்டுமே மாணவர்கள் தவறான வழிகளில் செல்வது பெருமளவு குறைக்க வாய்ப்பிருக்கிறது. இந்தப்பதிவு அரசின் கவனத்திற்கு செல்லுமா என்று தெரியவில்லை முடிந்த வரை இந்தப்பதிவை அரசு அதிகாரிகளிடமும் நம் சமுதாய நண்பர்களிடமும் கொண்டு சேர்ப்பது நம் ஒவ்வொருவரின் கடமை.

ஒரு விபத்து நடந்து மக்களை காப்பாற்றுகிறவர்களை விட,விபத்தே நடக்காமல் பாதுகாக்கப்படவேண்டும் என்ற முன்னெச்சரிக்கை யோசனையை இங்கு வழங்கியிருக்கிறேன்,ஆபத்தை தேடி போகும் குழந்தைகளைப்பற்றி நாம் கூற வில்லை,பல மாணவர்கள் விபரம் தெரியாமல் சென்றுவிடக்கூடாதே என்பதற்காக தான்.

இது வெறுமனே படித்துவிட்டு,விட்டுவிட வேண்டிய பதிவல்ல, யாரோ செய்வார்கள், யாரோ பார்த்துக்கொள்வார்கள்,என்றில்லாமல் இத்தகவலை இளைய தலைமுறைகள் நலனில் அக்கறைக் கொண்ட நம் ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும்.வருங்கால இந்தியாவின் நலன் கருதியும் நம் சமுக நலன் கருதியும் இப்பதிவை நம்மிடமுள்ள சமூக தளங்களிலும் வெளியிட்டு,அரசு அதிகாரிகளின் பார்வைக்கு கொண்டு சென்று அரசின் கதவுகளை தட்டுவதன் மூலம் இலவச லேப்டாப் கொடுக்கும் அரசு மிக பாதுகாப்போடு கூடிய லேப்டாப்பினை மாணவர்களுக்கு தர வழி வகை செய்யப்படவேண்டும்.

இப்போதைய மாணவர்கள் பல பல மடங்கு தொழில்நுட்ப துறையில் கரை கடந்தவர்கள்.

“திருடனா பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது” என்ற வரிகள் தான் இங்கும் உண்மையாகிறது…

மேலும் இப்பதிவு அரசு இலவசமாக தரும் மடிக்கணனி(லேப்டாப்)க்கு மட்டுமன்று ஒவ்வொரு மாணவர்களுடைய பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்கு தங்கள் சொந்த செலவில் வாங்கி கொடுத்தாலும் இத்தனை கட்டுப்பாடுகள் இருக்கிறதா என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

வல்ல அல்லாஹ் நம்மனைவரையும் பாதுகாத்து நேரான வழியை காட்டுவானாக ஆமின்.

Saturday, September 24, 2011

அணுமின் நிலையம் - ஒரு பாமரப் பார்வை


நம் நாட்டில் 19 அணுமின் நிலையங்கள் இயங்கி வருகின்றன. கூடுதலாகக் கூடங்குளத்தில் ஓர் அணுமின் நிலையம் அமைத்து, தமிழக மக்களின் 'மின் பசி'யைப் போக்குவதற்கு நடுவண் அரசு பத்தாண்டுகளாக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிர்ப்புப் தெரிவித்து, 127 பேர் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து, முதல்வரின் வாக்குறுதிக்கும் வேண்டுகோளுக்கும் இணங்கி இன்றோடு அவர்களின் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ள முன்வந்திருக்கின்றனர். அமைதி வழியில் போராடி வென்ற மக்களுக்கு நம் பாராட்டுகள்.


மறைந்த பிரதமர் இந்திரா காந்தி, அவருடைய பாதுகாப்பு அதிகாரியான சீக்கியர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டபோது சீக்கியர் சமுதாயத்தில் ஒருபகுதியினர் அழித்தொழிப்புக்கு உள்ளாயினர். அப்போது, ராஜீவ் காந்தி சொன்னவற்றை இங்கு நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்:
"ஓர் ஆலமரம் விழும்போது அதனால் ஏற்படும் அதிர்வுகள் தவிர்க்க முடியாதவை"

பதினான்கு ஆயிரம் கோடி ரூபாயில் அணுமின் நிலையம் அமைத்து 'ஒளிரும் இந்தியாவை'ப் பார்க்க வேண்டுமானால் சில இழப்புகளைத் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும் என்று விஞ்ஞானிகள் சமாதானம் சொல்லக் கூடும்.

"கூடங்குளத்திலிருந்து அணுக்கதிர் பரவினால் கூடங்குளம், பெருமணல், இடிந்தகரை, செட்டிகுளம், கூட்டபுளி, கூடுதாழை ஆகிய ஆறே ஆறு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மட்டுமே பாதிப்பு இருக்கும்" என்று விஞ்ஞானிகள் கருத்துக் கூறியுள்ளனர். அப்புறம் என்ன? கூடங்குளத்தை அடுத்துள்ள கடல்வாழ் உயிரினங்களுக்கு அணுக்கதிர்களால் பாதிப்பு ஏற்பட்டால் அந்தப் பகுதி மக்களுக்கு ஆளுக்கு ஐம்பது கிராம் 'இலவச இறைச்சி'த் திட்டத்தை நமது மத்திய-மாநில அரசுகள் கொண்டுவரமலா போய்விடும்? போன்ற ஆறுதல் செய்திகளை அறிவியலாளர்க
ள் அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஜப்பானில் சுனாமி ஏற்பட்டபோது புகுஷிமா நகரில் இருந்த அணுமின் நிலையம் வெடித்து ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். "நம்ம ஊருக்குத்தான் சுனாமி வரவில்லையே, கவலைப்பட என்ன இருக்கிறது?" என்பது விஞ்ஞானிகளின் அறிவார்ந்த(!) கேள்வியாகும்.
oOo
இனி, தினத்தந்தியின் நேற்றைய (21.9.2011) செய்திகள்:
அணுமின் நிலையம் பற்றி மக்கள் அச்சப்பட தேவை இல்லை - மத்திய மந்திரி நாராயணசாமி பேட்டி
சென்னை, செப்.21-

அணுமின் நிலையம் பற்றி மக்கள் அச்சப்பட தேவை இல்லை என்று மத்திய மந்திரி நாராயணசாமி கூறினார்.

மத்திய மந்திரி நாராயணசாமி நேற்று டெல்லியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்தார். விமான நிலையத்தில் நாராயணசாமி நிருபர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவில் 20 இடங்களில் அணுமின் நிலையங்கள் உள்ளன. ஒரு அணுமின் நிலையம் மட்டும் 20 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டதால் அதுதவிர மற்ற 19 அணுமின் நிலையங்கள் இயங்கி வருகின்றன. அதனால் எந்த வித பாதிப்பு ஏற்படவில்லை. நல்ல முறையில் அணுமின் நிலையங்கள் செயல்படுகின்றன.

இந்தியாவில் உள்ள அணுமின் நிலையங்கள் சர்வதேச தரத்திற்கு ஏற்ற வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அணுமின் நிலையங்களால் எந்த வித ஆபத்தும் ஏற்படாது. எனவே மக்கள் அச்சப்பட தேவையில்லை.

அணுமின் நிலையங்கள் தகுந்த பாதுகாப்புடன் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. ஜப்பான் நாட்டில் சுனாமியில் அணுமின் நிலையங்கள் வெடித்து பல உயிர்கள் பலியானதால் பொதுமக்கள் பயப்படுகின்றனர். ஜப்பான் நாட்டிற்கும், நம் நாட்டிற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.

இந்தியாவில் சுனாமி ஏற்பட்டபோது, கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. ஏன் என்றால் கல்பாக்கத்தில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

அதுபோல் தான் இந்தியாவில் உள்ள அனைத்து அணுமின் நிலையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

அணுமின் நிலையங்களுக்கு பிரதமர் தலைமையிலான கண்காணிப்பு குழு தான் பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரிடையாக செய்து வருகிறது. பொதுமக்கள் அச்சப்பட தேவை இல்லை.

இவ்வாறு மத்திய மந்திரி நாராயணசாமி கூறினார்.

Source: http://www.dailythanthi.com/article.asp?NewsID=675640&disdate=9/21/2011

விரிவான பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளதால் 'கூடங்குளத்தில் நடைபெறும் போராட்டம் துரதிர்ஷ்டவசமானது' - ரஷியா கருத்து

புதுடெல்லி, செப்.21-

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் அங்கு போராட்டம் நடைபெறுவது துரதிர்ஷ்டவசமானது என்றும் இந்தியாவுக்கான ரஷிய தூதர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் கடலோர கிராமமான கூடங்குளத்தில் ரஷியா உதவியோடு அணுமின் நிலையத்தை மத்திய அரசு அமைத்துள்ளது. ஜப்பானில் பூகம்பம் மற்றும் சுனாமியில் புகுஷிமா அணுமின் நிலையத்துக்கு பேரழிவு ஏற்பட்டது போலவே, கடலோரம் அமைந்துள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கும் ஆபத்து இருப்பதாக மக்கள் கருதுகின்றனர். எனவே, அணுமின் நிலையத்துக்கு எதிராக கடந்த 10 நாட்களுக்கு மேல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், கூடங்குளம் போராட்டம் குறித்து டெல்லியில் உள்ள இந்தியாவுக்கான ரஷிய தூதர் செர்கே கர்மலிடோ கூறியதாவது:-

கூடங்குளத்தில் நடைபெறும் போராட்டம் துரதிர்ஷ்டவசமானது. அந்த போராட்டத்தினால் டிசம்பர் மாதம் அணு உலையின் செயல்பாடு தொடங்குவதில் இடைïறு ஏற்படக்கூடும். கடந்த மாதம் சோதனை ஓட்டம் நடைபெற்றது. எதிர்கால மின் உற்பத்தியின்போது ஏற்படும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் ஆராயப்பட்டது. தற்போது, அணுஉலை செயல்படுவதில் தாமதம் ஏற்பட்டால் மற்ற ஒப்பந்தங்கள் மற்றும் திட்டங்களிலும் அதன் விளைவுகள் எதிரொலிக்கும்.

எங்களுக்கு கிடைத்த தகவலின்படி, அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு தன்மை குறித்து மக்கள் கவலை அடைந்துள்ளதாக அறிகிறோம். அணு உலையின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அணு வல்லுனர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர். எனவே, மக்களின் சந்தேகங்களை இந்திய அரசு தீர்க்க வேண்டும். இந்திய அரசும், இந்திய அணுசக்தி துறையும் இதை செய்வார்கள் என நாங்கள் நம்புகிறோம்.

கடந்த காலத்தில் இருந்தே இந்தியாவுடன் சாதகமான நல்லுறவு நீடித்து வருகிறது. எனவே, தற்போதைய சூழ்நிலையால் இருநாடுகளின் எதிர்கால கூட்டுறவுக்கு பாதிப்பு ஏற்படாது. அதே நேரத்தில், மக்களின் பிரச்சினைக்கு விரைவில் இந்தியா தீர்வு காணும் என நம்புகிறோம்.

ஜப்பானில் உள்ள புகுஷிமா அணுமின் நிலைய ஆபத்தை தொடர்ந்து, அனைத்து விதமான பாதுகாப்பு நடைமுறைகளையும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மேற்கொண்டுள்ளோம். மேலும், இந்தியா கேட்டுக் கொண்ட புதிய பாதுகாப்பு அம்சங்களையும் ரஷ்யா தனது கவனத்தில் கொண்டுள்ளது. அதன்படியே, விரிவான பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்ளும் தொழில்நுட்ப உதவியும் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

புகுஷிமா அணுமின் நிலையத்தோடு கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஒப்பிடக் கூடாது. அது பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. ஆனால், கூடங்குளத்தில் இருப்பது உலகில் உள்ள மிக சக்தி வாய்ந்த மற்றும் அதிநவீன அணுமின் நிலையங்களில் ஒன்று.

இவ்வாறு கர்மலிடோ தெரிவித்தார்.
oOo
விஞ்ஞானிகளெல்லாரும் விளக்கங்கள் சொல்ல முயல்கின்ற இந்தக் காலத்திற்கு இருபது ஆண்டுகளுக்கு முன்னர் "வெவரங்கெட்ட விஞ்ஞானிகளுக்கு ..." ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார் எழுத்தாளர் பாமரன். பொருத்தம் கருதி அது இங்கு மீள்பதிவு செய்யப்படுகிறது:

"வெவரங்கெட்ட விஞ்ஞானிகளுக்கு ..."
இப்பிடிக் கூப்பிடறனேன்னு கோவிச்சுக்காதீங்க. ஏதோ உங்கள மாதிரி நாலெழுத்துப் படிக்கிலீன்னாலும் அங்கியும் இங்கியும் காதுல உளுந்தத வெச்சுத்தான் இந்தக் கடுதாசிய எழுதறேன். எனக்கு அவ்வளவாப் படிப்பறிவு கெடையாதுங்க.

அந்தக் காலத்துல எங்க அப்பத்தா நெலாவைக் காட்டித்தான் சோறு ஊட்டும். அப்பறம் நெலாவைப் பாம்பு முழுங்கறது… பாம்பைப் போட்டு கடலைக் கடையறது… அப்பிடி இப்பிடின்னு கதையெல்லாம் சொல்லும். கொஞ்சம் பெரிசாக பெரிசாக நம்மூர்ல பெரியார் வேற மூலமூலைக்கு நின்னுகிட்டு “அடப் பைத்தியக்காரா! நெலாவென்ன லட்டா? ஜிலேபியா? பாம்பு வந்து முழுங்கறதுக்கு? கொஞ்சம் யோசிச்சுப் பாருங்கடா முட்டாப்பசங்களா…”ன்னு கன்னா பின்னான்னு திட்டீட்டு இருந்தது புரிய ஆரம்பிச்சுது.

பத்தாததுக்கு திடீர்ன்னு ஒரு நாள் உங்கள மாதிரி நாலு பெரிய மனுசனுங்க சேந்து நெலாவுலயே போய் குதிச்ச சேதி கேட்டதுமே சின்ன வயசுல கேட்ட சமாச்சாரங்க மேலெயெல்லாம் சந்தேகம் பொறந்துடுச்சு.

அப்புறம் ஒருநாளு நம்ம ஊட்டுல மாட்டீருந்த சங்கிலிக்கருப்பராயன்ல இருந்து சரசுவதி வரைக்கும் அத்தனையையும் கழுட்டி பொடக்காழில போய் போட்டுட்டு வந்தேன்.

என்ன இருந்தாலும் நீங்க என்னோட கண்ணத் தொறந்தவுங்க. நம்ம சனங்களோட முட்டாத்தனத்துக்கெல்லாம் ராப்பகலா ஆராஞ்சு பதிலு கண்டுபுடிச்சவுங்க….

இருந்தாலும்  பாருங்க….

இது  இந்த  சனங்களுக்குப்  புரியவே  மாட்டேங்குது….

என்னவோ நீங்களும் கூட ராக்கெட் உடறப்ப புள்ளையாருக்குத் தேங்கா ஒடச்சுட்டுத்தான் மேல உடறீங்களாமா? உங்கள மாதிரி விஞ்ஞானிங்க கூட திருப்பதில மொட்டை அடிச்சுக்கிட்டு லட்டுக்காக சண்டப் போட்டுக்கறீங்கன்னு கேள்விப்பட்டேன். அதக் கேட்டதும்தான் கோபம் பத்தீட்டு வந்துருச்சு. சங்கிலிக்கருப்பராயன பொடக்காழில போட்டதுக்கு பதிலா உங்களத் தூக்கிப் போட்டிருக்கலாமோன்னு தோணிச்சு. ஆனாலும் நம்மூர் பசங்கள நம்ப முடியாது. ஏதாவது புளுகுனாலும் புளுகுவானுகன்னு தெரிஞ்சுதான் இந்தக் கடுதாசிய எழுதறேன்.

அதென்னவோ கூடங்குளத்துல அணு உலையக் கொண்டுவரப் போகுது நம்ம கவர்மெண்டு… அது வந்தா ஊரே காலியாயிடும்…. புல் பூண்டு கூட மொளைக்காது….ன்னு மொளச்சு மூணு எலை கூட உடாத பசங்கெல்லாம் பேசீட்டுத் திரியுதுங்க. ஏங்க அணு ஒலை நம்ம விஞ்ஞானத்துக்கு எவ்வளவு பெரிய்ய்ய்ய்ய கெவுர்த்தி. இதப் புரிஞ்சுக்காம ஆபத்து கீபத்துன்னு அளந்துகிட்டு இருக்கானுங்க சிலபேரு. ஆனா அவனுக சொல்றதுலயும் ஒண்ணு ரெண்டு நல்லது இருக்கத்தான் செய்யுதோன்னு ஒரு சந்தேகங்க….

அமெரிக்காவுல என்னமோ இந்த ஒலைகளை வருசத்துக்கு கொறஞ்சது அறநூறு தடவையாவது மூடறானுங்களாமா? ஏங்க மூடறதுக்காகவா தொறக்கிறது? ஒரு எழவும் புரிய மாட்டேங்குதுங்க. ஏதோ உங்கள மாதிரி வெவரம் தெரிஞ்ச நாலுபேரு வெளக்கிச் சொன்னாத்தானே எங்குளுக்குப் புரியும்.

“அது” வந்தா இந்த நாட்டுக்கே வெளக்குப் போடலாம்… பேக்டரி ஓட்டலாம்….ன்னு சொல்ற ஆளுங்களும் இருக்காங்க. அப்புறம் என்னங்க இந்த நாட்டுக்கே வெளக்கு வருதுன்னா ஒரு ஊரு செத்தாத்தான் என்ன? அதுவும் பொதைக்கற வேல மிச்சம்னு சொல்றாங்க. அப்படியே சாம்பலாயிருமாமா? தூக்கற வேலயும் இல்ல… பொதைக்கற வேலயும் இல்ல.

ஒரு நாட்டுக்கு கரண்டு கெடைக்குதுன்னா ஒரு ஊரையே கொளுத்தலாம்…. இந்த ஒலகத்துக்கே கரண்டு கெடைக்குதுன்னா ஒரு நாட்டையே கொளுத்தலாம். எத்தன பேரு பஸ்சுலயும் ரயில்லயும் அடிபட்டுச் சாகறானுங்க… இதுல செத்தா எவ்வளவு கவுரவம். விஞ்ஞானத்துக்காக செத்தவன்னு பேராவது மிஞ்சுமில்லீங்களா?

இருந்தாலும்  பாருங்க….

இது  இந்த  சனங்களுக்குப்  புரியவே  மாட்டேங்குது….

அதென்னவோ அப்பிடிக் கிப்பிடி இந்த ஒலை வெடிக்கறமாதிரி தெரிஞ்சா ராவோட ராவா ஊர்சனத்த வேற தூரத்து ஊருக்கு கொண்டுபோற அளவுக்கு நெறைய பாதுகாப்பு சமாச்சாரமெல்லாம் செஞ்சிருக்கோம்; அதனால யாரும் பயப்பட வேண்டாம்னு கவர்மெண்டு சொல்றதா கேள்விப்பட்டேங்க. இதுலதாங்க ஒரு சின்ன சந்தேகம்….. என்னடா இது இவனே இப்பிடிக் கேக்கறானேன்னு கோவுச்சுக்கக் கூடாது.

ஏங்க நம்மூர் மூலைல தீப்புடிச்சாலே இந்த பயருசர்வீசு வர்றதுக்கு ஏழு மணி நேரமாவுது….. வந்தாலும் தண்ணி வந்தா பைப்பு கழுண்டுரும்…. பைப்பு செரியா இருந்தா தண்ணி வராது…. எல்லாஞ் சேந்து வர்றதுக்குள்ள தீ தானா அணஞ்சுரும். அப்புறம் எப்பிடீங்க இந்த ஒலைல ஏதாவுதுன்னா நாங்க உங்கள நம்பீட்டு உக்காந்திருக்கிறது? ஏதோ கேக்கோணும்னு தோணுச்சு கேட்டுட்டேன்…. சரி அத உடுங்க….

உலைல கெடக்கற கசடாமா….? அது பேரு புளூட்டோனியமோ என்னமோ…. அதுல இருந்து ஏதோ சக்தி வெளியே வந்துட்டே இருக்கும்னு சொல்றாங்க. அந்தக் காத்து நம்ம மேல பட்டாலேயே கண்ட கண்ட நோவெல்லாம் வரும்னு சொல்றாங்களே…. இது நெசந்தாங்களா?

ஆனா அதுக்கும் வழி இருக்கிறதா நம்மூர்ல பேசிக்கிறாங்க. அந்தக் கசட பத்திரமா எடுத்துட்டுப்போயி பொதைச்சிருவாங்க…. இல்லேன்னா நம்ம நாயர் கடை பார்சல் மாதிரிப் பண்ணி கடலுக்குள்ள  கடாசிருவாங்கன்னு கேள்விப்பட்டேன்.

உங்குளுக்குத்தான் எவ்வளவு நல்ல மனசு….

நீங்குளுந்தான் இந்த சனங்க உசுரக் காப்பாத்தறதுக்காக தலைல இருக்குற மசிரெல்லாம் போயி பாடாப்படறீங்க….

இருந்தாலும்  பாருங்க….

இது  இந்த  சனங்களுக்குப்  புரியவே  மாட்டேங்குது….

கசடைத் தூக்கி கடலுக்குள்ள போட்டா என்னைக்காவுது அதுல ஓட்டை விழுந்துச்சுன்னா மீனெல்லாம் சாகும்…. அதத் தின்னா நம்ம சனமெல்லாம் சாகும்னு சொல்றானுகங்க. ஏங்க….  இவனுக மீன் புடிக்க வேற எடமே கெடைக்காதா….? கடல்தான் கெடைச்சுதா….? ஏன் நம்மூர் வாலாங்கொளம் மாதிரி வேற ஏதாவது கொளத்துல மீன் புடிச்சா போதாதா….? அப்பிடி அதுலயும் தீந்து போச்சுன்னா நம்ம கெவர்மெண்டே ஊருக்கு ஏழு கொளம் வெட்டி அதுக்குள்ள மீனைக்கொட்டி நம்ம “பஞ்சாயத்து ராசு” மாதிரி “மீன் ராசு”ன்னு ஒரு திட்டம் கொண்டாந்தா எல்லாம் செரியாயிடுங்க…. இது புரியாம இவனுங்க…..

என்னமோ…. எந்த உலையா இருந்தாலும் முப்பதே வருசந்தான் ஆயுசு…. அதுக்கு அப்பறம் அதை சமாதி மாதிரி காங்கிரீட்டு போட்டு மூடி காவல் வேற வெக்கணும்…. அதக் கட்டறத விட மூடறதுக்கு பல மடங்கு செலவாகும்…. அப்பிடீன்னெல்லாம் சொல்றாங்க…. அதிலிருந்து வர்ற கதிரியக்கக் காத்தாமா….. அதுவேற பத்தாயிரம் வருசம் வரைக்கும் அடிக்கும்னு வேற சொல்றாங்க…. அப்ப ஒண்ணு பண்ணுங்க….. “நம்ம” தலைவருக்கு ஓட்டுப் போடாத ஊராப் பாத்து உலையை ஆரம்பிச்சிருங்க….

அது ஓடவும் வேண்டாம்….

அத மூடவும் வேண்டாம்….

ஒரேடியா அந்த ஊரையே மூடீறலாம். இப்பிடியே ஒவ்வொரு ஊரா மெரட்டுனா போதுங்க…. அப்புறம் ஊரென்ன…… நாடே நம்ம கைல….. ஏன்…. இந்த உலகமே நம்ம கைல… எப்புடி நம்ம “ஐடியா”?

இந்தக் கடுதாசிய எழுதி முடிக்கறப்ப இன்னொரு சமாச்சாரம் கைக்குக் கெடைச்சதுங்க. அதுவும் நீங்களே எழுதி  வெளியிட்டதுங்க. ஆனா…. அது கெடைச்சப்பறந்தாங்க கொளப்பமே அதிகமாயிடுச்சு…..

”தப்பித்தவறி உலைல இருந்து கதிரியக்கம் கெளம்பீடுச்சுன்னா….. ஜீப்புல மைக்கக் கட்டீட்டு ஊர் ஊராப் போயி தெரியப்படுத்துவோம்”னு போட்டிருக்கீங்க…..

ஏங்க….. கதிரியக்கம் கெளம்பீருச்சுன்னு தெரிஞ்சவுடனே எந்தப் பயலாவது ஜீப்பை ஊருக்குள்ள ஓட்டுவானுங்களா…..? இல்ல ஊரை உட்டே ஓடுவானுங்களா….?

சரி….. அது கெடக்கட்டும்…. அப்புடி என்னாவது சந்தேகம்னா அவுங்கவுங்க ஊட்டு ரேடியோப் பொட்டியையும், டீவீப் பொட்டியையும் தெறந்து கேளுங்கன்னு போட்டிருக்கீங்க…..

ஏங்க…. இந்த நாட்டுல என்னைக்காவுது  டீவியும் ரேடியோவும் உண்மை பேசி கேட்டுருக்கீங்களா? பெரியவர் செயப்பிரகாசு நாராயணன் குண்டுக் கல்லாட்டம் உயிரோட இருந்தப்பவே நம்மூர் ரேடியோ அவரைக் கொன்னு போட்டுது. ஊர்ல ஏதாவது பிரச்சனை….. கடையடைப்புன்னா….. ரோட்டுல திரியற கழுதை….. மாடு…. இதையெல்லாம் பாத்துட்டு உங்க ஆளுங்க பஸ்சுகள் பறந்தன….. ரயில்கள் மிதந்தன…. ”மாமூல்” வாழ்க்கை கெடவில்லை….ன்னு கப்சா உடுவாங்க. இந்த லட்சணத்துல நீங்க டீவீயையும் ரேடியோவையும் கேக்கச் சொல்றீங்களே….. இது உங்குளுக்கே நாயமாப் படுதா…..? வேண்ணா ஒண்ணு பண்ணச் சொல்லுங்க….. டீவீலயும் ரேடியோவுலயும்….”உலைகள் பத்திரமா இருக்கு. கதிரியக்கம் துளிக்கூட வெளியேறல….” அப்பிடீன்னு சொல்லச் சொல்லுங்க…. அப்பத்தான் சனங்க துண்டக் காணோம் துணியக் காணோம்னு ஊரைக் காலி பண்ணுவாங்க.

சரி…. இதுவும் கெடக்கட்டும்….. ஊட்டுல இருக்குற சன்னல்…. கதவையெல்லாம் இறுக்கமா மூடீட்டு உள்ள இருக்கச் சொல்றீங்க…..

சரிதான்…. ஆனா இங்க சனங்க ஊடே இல்லாம நாயும் பன்னியும் மாதிரி பசில பராரியா சுத்தீட்டு இருக்குறப்ப எப்புடீங்க ஊட்டுக்குள்ள பூந்து கதவச் சாத்தறது…..சன்னலை மூடறது? கண்டவன் ஊட்ல பூந்தா கதவச் சாத்த முடியும்? அப்பிடியே ஊடே இருந்தாலும் ஓடே இல்லாம….. மழை வந்தா தலைக்கிட்டயும் கால்கிட்டயும் கக்கத்துலயும் ஓட்டைச் சட்டிகளை வெச்சுட்டுக் கெடக்குற எங்கள மாதிரி சனங்க எதப்போயி அடைக்கிறது? எதப்போயி மூடறது? அப்படீன்னா…. ரோட்டோரமாப் படுக்குறவனும்….. பாட்டுப்பாடிப்     பொழைக்கிறவனும்…..    கழைக்கூத்தாடியும்……. எங்க போயி ஒடுங்குவாங்க…..? யார் ஊட்ல பதுங்குவாங்க…..?

இந்த மாதிரி ஆளுங்க எல்லாம் நம்ம நாட்டுக்கு அவமானமா இருக்குதுன்னு ஒருவேளை இந்தத் திட்டமோ என்னவோ…. ஆனா இதுக்குப் பதிலா ஊடில்லாம இருக்குற இதுகள ஓட்டீட்டுப் போறதை விட உலைக்குள்ளயே தூக்கிப் போட்டா…. ஏழ்மைய ஒழிச்ச மாதிரியும் இருக்கும்…. ஏழையவே ஒழிச்ச மாதிரியும் இருக்கும்.

இருந்தாலும் உங்குளுக்கு நல்ல மனசுங்க.

எது எப்பிடியோ ஊரைச் ”சுத்தம்” பண்றதுன்னு நீங்க தீர்மானிச்சாச்சுன்னா அதுக்கு “அப்பீலே” கெடையாதுங்க. அந்தக் காலத்துல பிளேக் நோவு வந்து ஊரையே தூக்கீட்டுப் போனாப்பல இந்தக் காலத்துல பிளேக்குக்கு அப்பனா அணு உலை வருது.

இந்த மடம் இல்லைன்னா வேற எந்த மடமாவது போக வேண்டியதுதான்….

அதுக்கும்….

உங்க விஞ்ஞானம்…..

உசுரோட உட்டு வெச்சா….
நன்றி :
   http://www.satyamargam.com/1781

உண்மையான பலசாலி யார்?

                     உண்மையான பலசாலி யாரெனில் தன் வலிமையால் மக்களை அடக்குபவன் அல்ல. மாறாக கோபம் வரும்போது தன்னை அடக்கிக் கொள்பவனே "ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு, ஆத்திரம் அழிவைத் தரும்" என்பதெல்லாம் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து சொல்லப்படும் வழக்குகள்.கோபம் ஏன் ஏற்படுகின்றது?

கோபம் என்பது உடல் ரீதியாக, மன ரீதியாக, சமூக ரீதியாக, உளவியல் ரீதியாக, உணர்ச்சிப் பூர்வமான, சுற்றுச்சூழல் சார்ந்த பல விஷயங்களுடன் நமக்கு உண்டாகும் எதிர்மறையான சூழ்நிலை காரணமாக உண்டாகிறது. நாம் சொல்வதை (நம்மைவிட எளியவர்கள் என்று நாம் நினைக்கும்) மற்றவர்கள் மதிக்காத போது...நம்முடைய பிரச்சனைகளை உரியவர்கள் உடனே நிவர்த்தி செய்யாத போது... நாம் சொல்வது (தவறாகவே இருந்தாலும்) தவறு என்று பலர் முன்னிலையில் விமர்சிக்கப்படும் போது...எதிர்பார்த்த மரியாதை கிடைக்காத போது ...இப்படியே பல காரணங்கள் உள்ளன. ஒருவன் மற்றொருவனைப் பார்த்து "கழுதை" என்று திட்டும்போது அவன் "குரங்கு" என்று பதிலுக்குத் திட்டினால், அந்தச் செயல்தான் கோபம் ஆகும். ஆக உடனே சிந்திக்காமல் ஏற்படும் ஒரு வித அதிருப்தியான வெளிப்பாடு தான் கோபம். அல்லது நம்மை நாமே தாழ்த்திக் கொண்டு சிந்திக்கும் போது ஏற்படும் எதிர் விளைவு கோபமாகும்.

கோபம் தன்னையே அழித்து விடும்.மனிதத்துவம் என்பது சமூகத்துடன் ஒன்றி வாழ்வதாகும். ஒருவருக்கொருவர் அனுசரித்து - பாராட்டி - உதவி செய்து வாழ்வதாகும். இதற்கு பொறுமை இன்றியமையாததாகும். ஒரு மனிதனின் வெற்றிக்கு தடையாத இருப்பதில் மிக முக்கியமானது கோபமாகும்.கோபம் கொள்வதால் நமது சிந்தனை, கவனம் போன்றன சிதறடிக்கப்படுகின்றன.

சரியான சமயத்தில் செய்ய வேண்டிய செயல்கள் இதனால் பாதிக்படுகின்றன. நம்மை சுற்றி இருப்பவர்களைப் பற்றியும் சூழ்நிலையையும் உணராது நமது செயல்கள் பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன. அவற்றுள்... வாழ்வின் சந்தோசத்தை பறித்து விடும். (கோபமும் சந்தோசமும் ஒன்றுக்கொன்று எதிரானவைகள்) திருமணம் மற்றுமுள்ள தொடர்புகளை அழித்து விடும்.தொழிலை முடக்கி விடும். காரணம் தொழில் என்பது தொடர்புகளுடன் சம்பந்தப்பட்டது. மன இறுக்கத்தை ஏற்படுத்தி இருதய வியாதிக்கு வழிவகுக்கும். முறையாக சிந்தித்து செயல்படுவதை தடுத்து நமது செயல்களை தவறானதாக்கி விடுகின்றது....கோபம், மாரடைப்பு முதலான இருதய நோய்களை உண்டாக்கி உயிரைப் பறித்து விடும் என்று வல்லுநர்கள் கூறுகின்றார்கள.55 வயதுக்கு கீழே உள்ளவர்கள் கோபப்பட்டால் அவர்கள் மாரடைப்பு உள்ளிட்ட இருதய வியாதிகளால் உயிரிழப்பதற்கான வாய்ப்பு 3 மடங்கு ஆகும். ஆனால் 55 வயதுக்கு கூடுதலாக இருந்தால் உயிரிழப்பு ஆபத்து 6 மடங்காக உயர்கிறது.

கோபமானது இதய ரத்த நாளங்களை கடினமாக்கும் அடைப்புகளை திடீரென சிதைப்பதால், அங்கே அடைப்பு வேகமாக உண்டாக வாய்ப்பு ஏற்படும். இது மாரடைப்பில் விட்டு விடும். இதயத் தசைகளில் வலிப்பு, இதயத் துடிப்பில் பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், ஆஞ்சைனா எனப்படும் நிலையற்ற நெஞ்சுவலி போன்ற சிக்கல்களும் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் தான். மூளையை தாக்கும் பக்கவாதத்துக்கு கூட கோபம் காரணமாக அமைவதுண்டு என சில மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன
.ஆக, கோபம் உங்களை அழிப்பதற்கு முன் நீங்கள் அதை அழித்து விட வேண்டியது முக்கியம். கோபத்தைக் கட்டுப்படுத்துதல்: கோபம் வரும்போது குறிப்பிட்ட மனிதன் தன்னிலை இழக்கிறான். இதனால் தான், கோபத்தில் கொந்தளிப்பவர்களுக்கு வியர்வை, நடுக்கம், மூக்கு விடைத்துக் கொள்தல், தூக்கமின்மை, ஓய்வின்மை, நெஞ்சுவலி, மாரடைப்பு, ரத்த அழுத்தம் திடீரென அதிகரித்தல், எரிச்சல், தசைகள் கெட்டித்தன்மை ஆவது, தலைவலி போன்ற பல பிரச்சினைகள் தோன்றுகின்றன.

கோபத்தை குறைக்க சில வழிகள்:
1. கோபத்தின் முக்கிய காரணியான வெறுப்பை கைவிடுங்கள். மற்றவர்களையும் அன்போடு பாருங்கள். நிதானமாக கோபமூட்டிய நபரின் சூழ்நிலையை சிந்தியுங்கள்.
2. கோபத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை தவிர்த்திடுங்கள். உடனே உங்கள் மனதை வேறு விசயத்தில் திருப்புங்கள்.
3. அவசரம் ஒருபோதும் வேண்டாம். பொறுமையாக இருங்கள்
4. நேரம் மேம்பாடு மற்றும் சுய கட்டுப்பாட்டை கடைப்பிடியுங்கள்.
5. செய்யும் வேலையை நேசத்துடனும், நேர்மையுடனும், குழப்பம் இல்லாமலும் செய்யுங்கள்.
6. கோபம் வருகிற சூழ்நிலைகளில் அதிகம் பேசாதீர்கள். மௌனமாக இருங்கள்.
ஒருமுறை இவைகளை கடைபிடித்துப் பாருங்கள்....
கோபம் பற்றி அல்லாஹ்வின் தூதர் சொன்னது என்ன தெரியுமா?

சுலைமான் இப்னு ஸுரத்(ரலி) அறிவித்தார்:நபி(ஸல்) அவர்கள் அருகில் இரண்டு பேர் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டார்கள். அப்போது நாங்கள் நபி(ஸல்) அவர்கள் அருகில் அமர்ந்துகொண்டிருந்தோம். அவர்களில் ஒருவரின் முகம் சிவந்து விட்டிருக்கக் கோபத்துடன் தம் தோழரைத் திட்டிக் கொண்டிருந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'எனக்கு ஒரு (பிரார்த்தனை) வார்த்தை தெரியும். அதை இவர் சொல்வராயின் இவருக்கு ஏற்பட்டுள்ள கோபம் போய்விடும். 'அவ்து பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்' (சபிக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்) என்பதே அச்சொல்லாகும்''என்று கூறினார்கள். எனவே, மக்கள் அம்மனிதரிடம், நபி(ஸல்) அவர்கள் சொல்வதை நீர் செவியேற்கவில்லையா? என்று கூறினார். அதற்கு அந்த மனிதர், 'நான் பைத்தியக்காரன் அல்லன்'' என்றார். (புகாரி 6115-6048-3282)

இறைத்தூதர்(ஸல்)அவர்கள் கூறினார்கள்: கோபம் ஷைத்தானிடமிருந்துள்ளது. ஷைத்தான் நெருப்பால் படைக்கப்பட்டுள்ளான். நெருப்பு தண்ணீரால்தான் அணைக்கப்படும். எனவே உங்களில் ஒருவருக்குக் கோபம் வந்தால் அவர் உளுச் செய்யட்டும்.(அபூதாவூத்,அஹ்மத்)
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் எங்களிடம், உங்களில் ஒருவருக்கு அவர் நின்று கொண்டிருக்கும் போது கோபம் வந்தால் அவர் உட்கார்ந்து விடட்டும். கோபம் அகன்றுவிட்டால் சரி. இல்லாவிடில் அவர் படுத்துக் கொள்ளட்டும் என்று கூறினார்கள். (அஹ்மத்)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (ஆதாரமில்லாமல் பிறரை) சந்தேகப்படுவது குறித்து உங்களை எச்சரிக்கிறேன்! ஏனெனில், சந்தேகம் கொள்வது மிகப் பெரிய பொய்யாகும். (பிறரின் குறையைத்) துருவித் துருவி ஆராயாதீர்கள். ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்.(புகாரி 6064-6066-5143-6724)

இறைத்தூதர்(ஸல்)அவர்கள் கூறினார்கள்: ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். (மாறாக,)அல்லாஹ்வின் அடியார்களே!(அன்பு பாராட்டுவதில்)சகோதரர்களாய் இருங்கள். எந்தவொரு முஸ்லிமும் தம் சகோதரருடன் மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று.(புகாரி 6065-முஸ்லிம்)

தமிழில் நினைத்தை எழுதுவதற்கு எளிதான வழி


மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து தமிழ் எழுத்துக்கான மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளவும்.அதற்கு பிறகு தேவையான மொழியை ஆங்கிலமோ அல்லது தமிழோ தேர்ந்தெடுக்க Alt + 2 அழுத்தவேண்டும்.மேலதிக தகவலுக்கு mhsalih@gmail.com தொடர்பு கொள்ளவும்.




கடவுச்சீட்டு விண்ணப்பிக்க போகிறவர்களின் கவனத்திற்கு......


அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)


இன்றைய காலத்தில் பாஸ்போர்ட் கடவுச்சீட்டு இன்றியமையாத பொருளாகவிட்டது. புனித ஹஜ்ஜீக்கு செல்வதற்குக் கூட பாஸ்போர்ட் அவசியம்.
அல்லாஹ் ஹஜ் செல்லக்கூடிய பாக்கியத்தை நம் அனைவருக்கும் தந்தருள்வானாக ஆமீன். மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு, சுற்றுலா செல்வதற்கும் பாஸ்போர்ட் மிக மிக அவசியம். 
படித்துகொண்டிருக்கும் போதே பாஸ்போர்ட் அப்ளை செய்துகொண்டால் மிக மிக நல்லது.
பின்னாளில் அலைச்சல் குறையும்.புதிய பாஸ்போர்ட் அல்லது ரினிவல் பண்ணப் போகிறவர்களுக்கு எனக்குதெரிந்த சில   விஷயங்களை மற்றவர்களுக்கு பகிர்ந்துக்கொள்வதன் மூலம் அவர்கள் அடிக்கடி பாஸ்போர்ட் அலுவலகம் செல்லவேண்டியதில்லை என்ற நல்ல நோக்கத்தில் எழுதுகிறேன்.

முதலில் ஆன்லைனில் விண்ணப்பம் செய்து விடுங்கள் அதற்கான லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.


http://passport.gov.in/pms/OnlineRegistration.jsp

Continue என்பதை கிளிக் செய்தவுடன்
Passport Office என்ற பகுதியில் உங்கள் பகுதி உட்பட்ட இடத்தை தேர்வு செய்து கொள்ளவும்.அதில் உள்ள அனைத்து விசயங்களையும் கண்டிப்பாக நிரப்பி கொள்ளவும்.
District: உங்களது மாவட்டதை தேர்வு செய்து கொள்ளவும்.
Service Desired: எந்த விதமான பாஸ்போர்ட் புதிய பாஸ்போர்ட்டா அல்லது ரினிவலா என்பதை தெரிவு செய்துகொள்ளவும்.
Surname: உங்களது இன்சியல் (பொதுவாக வாப்பாவோட பேரு அல்லது கல்யாணாம் ஆன பெண்ணாக இருந்தால் கணவனின் பெயர்)
First Name: உங்களது பெயர்
உங்களது பெயரை முன்பு மாற்றி இருந்தால் "if you have ever changed your name click the box and indicate Previous Name(s) in full" என்பதை கிளிக் செய்துகொள்ளவும்.
Previous Name: உங்களது முன்பு இருந்த பெயரை எழுதிக்கொள்ளவும்.
Sex: ஆணா, பெண்ணா என்று குறிப்பிடவும்
Date of Birth: பிறந்த தேதி நாள் மாதம் வருஷம்  (DD MM YYYY) குறிப்பிடவும்.
Place of Birth: பிறந்த ஊர்
District or Country: நீங்கள் இந்தியாவில் பிறந்திருந்தால் பிறந்த மாவட்டதையும் பெயரையும்
வேறு நாட்டில் பிறந்திருந்தால் அந்நாட்டின் பெயரையும் குறிப்பிடவும்
Qualification: உங்களது படிப்பு
Profession: உங்களது தொழில்
Visible Mark: உங்கள் உடம்பில் தெரியும் ஏதாவது அடையாளம் (மச்சம் போன்றவை)
Height (cms): உயரம்
Present Address: தற்போதைய குடியிருப்பு முகவரி
Permanent Address: நிரந்தரமான குடியிருப்பு முகவரி
Please give the Date since residing at the Present Address: எவ்வளவு நாட்களாக தற்போதைய குடியிருப்பு முகவரியில் தங்கி உள்ளீர்கள் என்பதை தெரிவிக்கவும்.
Phone No: வீட்டு தொலைபேசி எண்
Mobile No : கைத்தொலைபேசி எண்
Email Address: இமெயில் முகவரி
Marital Status: திருமணமான தகவல்
Spouse's Name: கணவர்/மனைவியின் பெயர்
Father's Name: வாப்பா (தகப்பனார்) பெயர்
Mother's Name: உம்மா (தாயார்) பெயர்
தற்போதைய முகவரியில் கடந்த ஒரு வருஷமாக வசிக்கவில்லை என்றால் "If you are not residing at the Present Address for the last one year, click on this box and furnish addresses of the other place(s) of residence in the last one year along with the duration(s) of living there." என்பதை கிளிக் செய்து கீழ் இருக்கும்
From: To: Address 1 : என்னும் தகவலை குறிப்பிடவும்
பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு டிடி மூலம் பணம் செலுத்த விருப்பப்பட்டால் "If you have a Demand Draft, click on this box and fill the details below" என்பதை கிளிக் செய்து
 DD No, DD Date, Bank Name தகவலை பூர்த்தி செய்துகொள்ளவும்.
உங்களிடம் ஏற்கனவே பாஸ்போர்ட்(கடவுசீட்டு) இருந்து வருடம் முடிந்து, புதிதாக வேறு அப்ளை செய்ய போகிறீர்கள் என்றால் "If you have held a passport or hold a passport at present, click on this box and fill the details below" என்பதை கிளிக் செய்து
Old/Existing Passport No: பழைய பாஸ்போர்ட் எண்
Issue Date: பழைய பாஸ்போர்ட் வழங்கிய தேதி
Place of Issue: பழைய பாஸ்போர்ட் வழங்கப்பட்ட இடம்
File Number: பழைய பாஸ்போர்ட் பைல் எண் (பழைய பாஸ்போர்ட் கடைசி பக்கத்தில் பார்த்து பூர்த்தி செய்துகொள்ளலாம்)
Date Of Expiry: பழைய பாஸ்போர்ட் இறுதி(முடிவு) நாள்
சிகப்பு கலரில்லதை கண்டிப்பாக எழுதவும்.
மெரூன் கலரில்லதை தேவைப்பட்டால் மட்டும் எழுதவும்.
அனைத்தையும் ஒன்றுக்கு இருமுறை பார்த்து  அனைத்தையும் சரியாக பூர்த்தி செய்துவிட்டோம் என்று உறுதி செய்துகொண்டு, "Save" என்பதை கிளிக் செய்தவுடன் அந்த பாஸ்போர்ட் ஆபிஸிக்கு அடுத்து செல்லவேண்டிய  (availability date and time) நேரம் தேதியை காட்டும்,நாம் அதில் நமக்கு தேவையான நாளை,நேரத்தை தேர்ந்து எடுத்து கொள்ளலாம்.
பிறகு அதை ஒரு இடத்தில் SAVE செய்து,மறக்காமல் பிரிண்ட் எடுத்து கொள்ளவும், போட்டோ ஒட்ட வேண்டிய இடத்தில் போட்டோவை ஒட்டவும்.  அதில் எதையும் மாற்றம் செய்யதுவிட வேண்டாம்.
முகவரி சான்றிதழ் (ஏதாவது இரண்டு) :
    * ரேசன் கார்டு
    * குடிநீர் ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
    * தொலைபேசி ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
    * மின்சார ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
    * கேஸ் கணக்சன் பில் (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
    * வாக்காளர் அடையாள அட்டை
    * வங்கி கணக்கு புத்தகம் (கடந்த ஒரு வருடமாக பணம் எடுக்கவும் போடவும் செய்து அதை பதிவு செய்திருக்கவேண்டும்)
    * துணைவியின் (மனைவின்) பாஸ்போர்ட்
பிறந்த தேதி சான்றிதழ் (ஏதாவது ஒன்று)_:
    * 1989 பிறகு பிறந்தவர்கள் என்றால் அரசாங்கத்தால் தரும் பிறப்பு சான்றிதழ்
    * பள்ளியில் வழங்கப்படும் சான்றிதழ்
    * கெஜட்டடு (நோட்ரி பப்ளிக்) ஆபிசர் மூலம் வாங்கவேண்டும்
வேறு  சான்றிதழ்கள் :
    * 10வது மேல் படித்திருந்தால் ECR முத்திரை இருக்காது, அதற்காக கடைசியாக எதை படித்து முடித்தீர்களோ அதனை கொண்டுபோகவும்.
    * உங்களது பெயரை (மதம் மாறும்போது/ எண்கணித முறையில்) மாற்றி இருந்தால் அதற்கு உண்டான சான்றிதழ்.
    * பழைய பாஸ்போர்ட் எடுக்கும் போது திருமணம் ஆகாமல் இருந்து, பழையது முடிந்து ரினிவல் பாஸ்போர்ட் அப்ளை செய்ய போனாலும் மேற்கண்ட அனைத்தையும் கொண்டு போகவேண்டும், மேலும்  திருமண சான்றிதழ் இணைக்க வேண்டும் அல்லது மாவட்ட நீதிமன்றத்தில்/ நோட்ரி பப்ளிக் மூலமாக கணவனும் மனைவியும் சென்று வாங்கவேண்டும். பழைய பாஸ்போர்ட்டை கொண்டு செல்ல வேண்டும்.
அனைத்து சான்றிதழ் ஒரிஜினலையும் மேலும் இரண்டு செட் (நகல்)ஜெராக்ஸையும் கொண்டு செல்லவும்.  குறைந்தது நான்கு பாஸ்போர்ட் சைஸ் (3.5 x 3.5 CM) தேவைப்படும். நீங்கள் அப்ளை செய்யும் போது வரும் நாளையும் நேரத்தை நன்கு குறித்து கொண்டு, அன்றைய நாளில் காலையிலே பாஸ்போர் ஆபிஸ் சென்று விடுங்கள், அவர்கள் கொடுக்கும் நேரம் என்பது கணக்கில் எடுத்துக்கொள்ளமாட்டாது.நாள் மட்டும்தான் உண்மை, முன்பாக சென்றாலே சீக்கிரம் வேலை முடியும்... கால் கடுக்க நிற்க வேண்டும், ஆதலால் மறக்காமல் நன்றாய் சாப்பிட்டுவிட்டு செல்லவும்.
மேலும்  கூடிய விரைவில் பாஸ்போர்ட் கிடைக்க வாழ்த்துக்கள். மேலதிக தகவல்களுக்கு
 அடுத்து வாகன ஒட்டுநர் உரிம்ம் லைசென்ஸ் எவ்வாறு விண்ணப்பிக்கும் முறை பற்றி உங்களை சந்திக்கிறேன்.
அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.

Sunday, September 18, 2011

உள்ளாட்சி தேர்தல் 2011: கோமான் ஜமாஅத்தார்களுக்கு வேட்பாளர் லுக்மான் எழுதிய கடிதம்!


                              வரும் நகர்மன்ற தேர்தலில் - வார்ட் 1-ன், கோமான் மொட்டையார் ஜமாஅத் உடைய அதிகாரப்பூர்வ வேட்பாளராக
ஹாஜி ஏ. லுக்மான் நேற்று தேர்வு செய்யப்பட்டார்.
Koman Educational Forum அமைப்பின் செயலாளரான இவர் - தேர்தலில் நிற்பது குறித்து, தனது ஜமாஅத்தார்களுக்கு எழுதிய கடிதத்தின் விபரம் வருமாறு:-

அன்புள்ள ஜமாஅத்தார்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்,

நடைபெறவிருக்கும் நகராட்சி தேர்தலைக் கருத்தில் கொண்டு, சென்னையிலும், நமது ஊரிலும் இருக்கும் ஜமாஅத் அன்பர்களின் வேண்டுகோளை ஏற்று, எனக்கு விருப்பம் குறைவாக இருந்தாலும் தகுதியான நபர் நமது வார்டின் சார்பாக நகராட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற அவர்களின் உயரிய நோக்கத்தை அடிப்படையாக கொண்டு, தேர்தலில் போட்டியிடுவதற்கான எனது விருப்ப மனுவை தாக்கல் செய்கிறேன்.

நான் நம் ஜமாஅத்தை சார்ந்த யாருடனும் போட்டியிட விரும்பவில்லை. என்னை விட தகுதியான நபர் போட்டியிட விரும்பும் பட்சத்தில் அவர்களுக்கு விட்டுக்கொடுக்க தயாராக இருப்பதுடன், அவர்களின் வெற்றிக்காக பாடுபடுவேன் என்றும் உறுதியளிக்கிறேன்.

மேலும், ஒரு மனதாக ஜமாஅத்தார்கள் என்னை பதவிக்கு தேர்ந்தெடுத்தால் நான் கூறும் உறுதிமொழி என்னவென்றால் -

அல்லாஹ்வின் மீது ஆணையாக

1) ஒரு போதும் லஞ்சம் வாங்க மாட்டேன்

2) வேண்டியவர், வேண்டாதவர் என்று யாரிடமும் பாரபட்சமாக நடந்துக்கொள்ளமாட்டேன்

3) எனது சக்திக்கு உட்பட்டு நகராட்சியின் சட்டதிட்டங்களை அறிந்துக்கொண்டு, நமது பகுதிக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளை போராடி பெற முயற்சிப்பேன்

4) ஊர் விஷயத்தில் பொதுவான காரியங்களில் நம் ஜமாஅத்தின் ஆலோசனைப்படி செயல்படுவேன்

5) நான் யாரிடமும் லஞ்சம் பெற்றதாக புகார் கூறி அதை நிருபித்தாலோ, அல்லது எனது நகராட்சி செயல்பாடுகளில் நம்பிக்கையின்மையும், அதிருப்தியும் இருப்பதாக ஜமாஅத் கருதி என்னை பதவியிலிருந்து விலகும்படி ஜமாஅத் கூட்டத்தில் பெரும்பான்மையோரால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், மறுகனமே நான் எனது நகராட்சி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிடுவேன் என்றும் இதன் மூலம் உறுதியளிக்கிறேன்.

வஸ்ஸலாம்,

A. லுக்மான்,
62 கோமான் நடுத் தெரு,
காயல்பட்டணம்.

இவ்வாறு ஹாஜி ஏ. லுக்மான் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.