Tuesday, October 30, 2012

கால்பந்து விளையாட்டில் 300 கோல்கள் அடித்து மெஸ்ஸி சாதனை!!!

ஸ்பெய்ன்:சர்வதேச கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி 300வது கோலை அடித்தார்.
அர்ஜென்டினா கால்பந்து அணியின் அணித்தலைவரான மெஸ்சி, பார்சிலோனா அணிக்காவும் விளையாடி வருகிறார்.
தற்போது ஸ்பெயினின் மேட்ரிட்டில் நடைபெற்று வரும் லா லிகா கால்பந்து கிளப் அணிகளுக்கான போட்டியில் பார்சிலோனா அணி இடம்பெற்றுள்ளது.
நேற்று நடைபெற்ற போட்டியில் ராயோ வாலேகானோவுடன், பார்சிலோனா அணி மோதியது. இதில் மெஸ்சி தன்னுடைய 300வது மற்றும் 301வது கோல்களை போட்டார்.
ஏற்கனவே பார்சிலோனா அணி 3 கோல்கள் போட்டிருந்தது. இதனால் அந்த அணி 5-0 என்ற கோல் கணக்கில் ராயோ வாலெகானோவை அபாரமாக வீழ்த்தி, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்தது.
மெஸ்சி அடித்துள்ள 301 கோல்களில், 270 கோல்கள் பார்சிலோனா அணிக்காகவும், 31 கோல்களை அர்ஜென்டினாவுக்காக போட்டுள்ளார்.
இதை வெறும் 419 ஆட்டங்களிலேயே அவர் சாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆச்சரியம்!!! எப்படி விமானம் காற்றில் எழும்பி பறக்கிறது

இன்று வரை அறிவியலில் பல விந்தைகள் இருந்தாலும், பலரும் பரவசப்படுவது விமானம் எப்படி பறக்கிறது என்பதுதான்

பலமுறை விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு கூட எப்படி விமானம் காற்றில் எழும்பி பறக்கிறது என்ற ஆச்சிரியம் ஒவ்வொரு முறை பறக்கும்போதும் வரும்

சரி எப்படித்தான் அந்த மிகப்பெரிய ஊர்த்தி காற்றில் பறக்கிறது…

இந்த விஷயத்திற்கு போவதுற்கு முன் சில அடிப்படை விஷயங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது

ஒரு பறக்கும் பொருளில் நாலு விதமான விசைகள் உண்டு

A ஒரு பறக்கும் பொருளை, மேல்நோக்கி இழுக்கும் லிப்ட் (Lift)

B முன்னோக்கி இழுக்கும் த்ரஸ்ட் – Thrust

C கீழ்நோக்கி இழுக்கும் எடை – Weight

D பின்னோக்கி இழுக்கும் டிராக் – Drag

ஒரு விமானம் ஒரே உயரத்தில் , நேராக பறக்க இந்த கணிதக்கூற்று சமணாக இருக்க வேண்டும்

Weight=Lift

Drag=Thrust

த்ரஸ்ட், டிரேகைவிட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் கூடும்

டிராக் த்ரஸ்டை விட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் குறையும்

விமானத்தின் எடை ‘லிப்ட்’ விசையை விட கூடுதலாக இருக்கும்போது விமானம் கீழிறங்கும்

விமானத்தின் ‘லிப்ட்’ விசை விமானத்தின் எடையைவிட அதிகமாக இருக்கும்போது விமானம் மேல் எழும்பும்

சரி… பலருக்கு இப்போ ஒன்று நன்றாக புரியும், விமானம் முன்னே செல்வதற்கான விசையை கொடுப்பது விமானத்தின் இஞ்சின் என்று, அதாவது த்ரஸ்ட் விசையை கொடுப்பது இஞ்சின்,

அதே போல விமானத்தில் ‘டிராக் விசையை கொடுப்பது’ காற்றினால் விமானத்தில் ஏற்படும் உராய்வுகள், இஞ்சின் ஆப் செய்யப்பட்டால் சிறிது நேரத்தில் விமானம் மெதுவாகிவிட காற்றினால் ஏற்படும் உராய்வே கார்ணம் (அதாவது வானத்தில்). ஒருவேளை பூமியில் காற்று இல்லையென்றால், இஞ்சினை ஆப் செய்தாலும் விமானம் மெதுவாக முடியாது.

(பலருக்கு ஒரு விஷயம் ஆச்சரியமாக இருக்கும், ஏன் விமானம் மேலே எழும்பியவுடன் சக்கரத்தை உள்ளே இழுத்துக்கொள்கிறது, வெளியிலேயே இருந்தால் என்ன கெட்டுவிட்டது என்று. இதை செய்வதற்கு காரணம், காற்றினால் சக்கரத்தில் ஏற்படும் உராய்வை தடுப்பதுதான். அந்த உராய்வுடன் பறந்தால் விமான எரிபொருள் செலவு இருமடங்காக இருக்கும், மேலும் அதிக வேகத்தை விரைவில் எட்ட முடியாது)

விமானத்தில் கீழ் நோக்கு விசையை கொடுப்பது இமானத்தின் சொந்த எடை மற்றும் புவி ஈர்ப்பு விசை இது எல்லோருக்குமே தெரிந்திருக்கும்

பலருக்கும் புரியாத புதிராக இருப்பது விமானத்தின் மேலிழுக்கும் விசை எங்கு உற்பத்தி ஆகிறது என்பதுதான். இது சற்று சுவாரஸ்யமானது

எலிகாப்டரின் மேலெழும்பு விசை அதன் மேகிருக்கும் விசிரியால் வருகிரது என பலர் சொல்லிவிடுவார்கள், விமானத்திற்கு முன்னே செல்லும் விசைதானே உள்ளது, மேலே எப்படி எழும்புகிறது என்ற கேள்வி பலர் மனதில் இருக்கும்

உண்மையில் விமானத்தின் மேலுழும்பு விசையை தருவதும் அதே எஞ்சிந்தான் , சற்று மறைமுகமாக

விமானத்தின் மேல் நோக்கு தூக்கு சக்தி உற்பத்தி செய்யப்படுவது அதன் இறக்கை, விமானத்தின் வேகம், மற்றும் காற்றின் கூட்டணியில்தான் . இந்த மூன்றில் ஒன்று இல்லாவிட்டாலும் தூக்கு சக்தி உருவாகாது , விமானம் பறக்காது. அதாவது இறக்கை இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, விமானத்தில் வேகம் இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, காற்று இல்லாமல் மீதி இரண்டும் இருந்தாலும் பறக்க முடியாது

விமானத்தின் இறக்கையை கூர்ந்து கவனித்தால் ஒன்று புரியும், (மிகவும் கூர்ந்து கவனிக்க வேண்டும்). விமானத்தின் இறக்கையின் மேல்பாகம் சற்று, மிகவும் சற்று மேல் நோக்கி வளைந்திருக்கும். கீழ்பாகம் தட்டையாக இருக்கும். இதை சாதாரணமாக இறக்கையை பார்த்தால்கூட கண்ணுக்கு எளிதாக தெரியாது, அதை தொட்டுப்பார்த்தால்தான் தெரியும்

இந்த மேல்நோக்கிய வளைவு எதற்காக? இங்குதான் விஷயம் உள்ளது

காற்று அசுரவேகத்தில் விமானத்தின் இறக்கையோடு உராயும்போது, விமானத்தின் இறக்கையின் மேற்புறம் ஒரு குறைந்த காற்றுழத்த மண்டலம் உருவாகுகிறது, கீழ்புறம் காற்றழுத்தத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு புறம் அதிக காற்றழுத்தம் ஒரு புறம் குறைந்த காற்றழுத்தம் இருக்கும்போது, குறைந்த காற்றுழத்த பகுதியை நோக்கி பொருள் ஈர்க்கப்படுவது அறிவியல் நியதி (Vacuum Cleaner பொருளை உள்ளே இழுப்பது குறைந்த காற்றழுத்தத்தை உள்ளே உருவாக்குவதினால்தான்)

விமானத்தை மேல்நோக்கி இழுக்கும் விசை, விமானத்துக்கும் காற்றுக்குமான ரிலேடிவ் வேகத்தையும், இறக்கையின் பரப்பளவையும் பொருத்தே அமையும்

அதனால்தான் எடை அதிகமான விமானத்தின் இறக்கை பெரியதாக அதிக பரப்பளவுள்லதாக இருக்கும்

இப்போது காற்றுக்கும் விமானத்திற்குமான ரிலேடிவ் வேகத்தை எது தீர்மாணிக்கிறது? சந்தேகமில்லாமல் விமானத்தின் வேகம், அதை தீர்மாணிப்பது எது? விமானத்தின் இஞ்சின் , எனவே விமானத்தின் மேலெழும்பு சக்தியையும் கொடுப்பது, அதே இஞ்சின் தான் என்பது தெளிவாகிறது அல்லவா?

அதனால்தான் விமானம் மெதுவாக ஓடும்போது அதற்கு பறக்கும் சக்தி இருக்காது. (எலிகாப்டரின் மேலெழும்பு விசைக்கும் வேகத்திற்கும் சம்மந்தம் இல்லை என்பதால் அது ஓடாமலே மேலே எழும்புகிறது, ஆனால் விமானத்தின் முன் செல்லும் வேகம் எலிகாப்டருக்கு வராது)

இது எல்லாம் சேர்ந்துதான் விமானம் இப்படி டேக் ஆப் ஆகிறது

விமானம் ஓடினால் மட்டும் அல்ல, அதே வேகத்தில் காற்று புயல்போல அடித்தாலும் (அந்த வேகத்திற்கு காற்று அடிப்பது கடினம்தான்) விமானம் நின்றுகொண்டிருந்தால் கூட விமானம் தூக்கப்பட்டுவிடும். கடும் புயல் அடிகும்போது, சில ஓட்டு வீட்டு கூறைகள் பீய்த்துக்கொண்டு மேலெழும்பி காற்றில் பரப்பதற்கான காரணம் இப்போது புரிகிறதா?

அதனால்தான் குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் விமானம் சென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் எப்போதும் உள்ளது, அப்போதுதான் அதன் இறக்கையில் மேலிழுக்கும் சக்தி தொடர்ச்சியாக அதன் எடையை சமன் செய்யும். அந்த வேகத்திலிருந்து குறைந்தால் விமானம் கீழே இறங்க துவங்கிவிடும். மெதுவாக போவது, சாவகாசமாக போவது எல்லாம் விமானத்திற்கு வேலைக்கே ஆகாது

ஒரு டெயில் பீஸ், இந்த இறக்கை மேட்டர் எல்லாம் காற்று உள்ள இடங்களில் மட்டும்தான். பூமியை தாண்டி வின்வெளிக்கு சென்றுவிட்டால் பறப்பதற்கு இறக்கை தேவைப்படாது

மனிதனால் பறக்க முடிவும் என்பது பற்றி இறைவன் திருமறையில்…

மனித ஜின் கூட்டமே! வானங்கள் மற்றும் பூமியின் விளிம்புகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெற்றால் கடந்து செல்லுங்கள்! ஆற்றல் மூலம் தவிர நீங்கள் கடந்து செல்ல மாட்டீர்கள்.டாது)

அல்குர்அன் 55-33

Sunday, October 28, 2012

இன்ஷா அல்லாஹ் நிச்சயம் சமுதாயத்தில் மாற்றம் வரும்...மௌலவி N.S.ஷம்சுத்தீன் சாதிக்.பாஜில்மன்பஈ (துபை).


அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்பாலனுமாகிய ஏக வல்லோன்
அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.
இன்று முஸ்லிம் சமுதாயம் அடைந்து கொண்டிருக்கும் கஷ்டத்தையும்
நஷ்டத்தையும் கண்கூடாகக் காணும் போது,இதயத்தில் ஈமானை சுமந்திருக்கும்
ஒவ்வோர் இஸ்லாமியனுக்கும் குருதியில் உஷ்ணம் தானாகவே ஏறிவிடும்.இந்த
சமுதாயத்தை சீர்கெடுக்க வேண்டும் என்பதற்காக
பல நூற்றாண்டுகளாக எதிரிகள் தீட்டிய சதிக்கு இந்த  நூற்றாண்டில் நாம்
பலியாகிக்  கொண்டிருக்கிறோம்,என்பதை நினைக்கும் போது மனம் வேதனையில்
துடிக்கிறது.
ஆம் மார்க்கத்தை முறையாக புகட்டி வளர்க்காததினால் எதிரியின் அம்புகளுக்கு
நம் பெண் பிள்ளைகளையும்,ஆண் பிள்ளைகளையும்,இரையாக்கிக் கொண்டிருக்கிறோம்.
கல்வியைக் கற்பது ஒவ்வொரு முஸ்லிமின்  மீது கடமை.(அல்ஹதீஸ்).அனைவரும்
அறிந்திருக்கும் இந்த ஹதீஸிற்கு என்ன பொருள்?அனைத்துமே கல்விதான் என்று
பொருள் கொடுக்க  முடியுமா?
அப்படி பொருள் கொடுத்தால்,அனைத்தையும் அனைவருமே கற்பது கடமையாகிவிடுமே இது
சாத்தியமா?
அவரவர் விரும்பிய கல்வியைக்  கற்றுக் கொள்ளலாம் என்று பொருள்
கொடுத்தால்,பட்டபடிப்பு வரை   படித்தவரும் கற்றவரே.உயர்நிலை பள்ளிவரை
படித்தவரும் கற்றவரே.படிப்பை தொடர முடியாமல் ஆரம்பப் பள்ளியிலேயே எழுத
வாசிக்கத்  தெரிந்ததோடு படிப்பை கைவிட்டவரும் கற்றவரே.
எனப் பொருளாகிவிடும்.இவ்வாறு பொருள் கொடுப்பது போன நூற்றாண்டுக்கு
வேண்டுமானால்  பொருந்தலாம்.ஆனால் இந்த நூற்றாண்டில் கல்லூரி வரை சென்று
பாதியிலேயே படிப்பைக் கைவிட்டவரைக் கூடகற்றவர் என்று சொல்ல உலகம்
கூச்சப்படுகிறது. இப்படியிருக்கும்போது வெறுமெனே எழுத படிக்க மட்டும்
தெரிந்த  ஒருவரை கற்றவர் என்று சொன்னால்,சொன்னவரை பைத்தியக்காரன் என்று
தான்  அனைவருமே கூறுவர்.
உண்மையில்  மேற்குறிப்பிட்ட இரு பொருளில்,இரண்டாவது பொருள்  இந்த ஹதீஸின்
அடிப்படைஅர்த்தங்களில் ஒன்று என்பதுதான் நிதர்சனம்.ஆனால் அது மட்டுமே
கல்வியாகி
விடுமா?என்றால் ஆகாது.
ஏனெனில் நான் ஆசிரியராக அனுப்பப்பட்டுள்ளேன்.என கண்மணி நாயகம்
(ஸல்)அவர்கள் நவின்றுள்ளார்கள்.அவ்வாறெனில் அவர்கள் கல்வியைக்
கற்றுகொடுத்துள்ளர்கள் என்றுதான்  அர்த்தம்.அந்தக் கல்வியைக் கற்றுக்
கொள்வதுதான் அனைத்து முஸ்லிம்கள் மீதும் கடமையாகும்.
என கண்மணி நாயகம்(ஸல்)அவர்கள் வலியுருத்தியுள்ளர்கள்.
அதில் முதன்மையானதும் மனித வாழ்க்கைக்கு மிக முக்கியமானதும் அருள் மறைக்
குர்ஆனாகும்.
மேலும் மனிதனின் நாடி நரம்புகளில் ஆதிக்கம் செலுத்தும் ஷைத்தானை
துறத்தி,மிருகத் தன்மைக்கும்
மனிதத் தன்மைக்கும் வேறுபாட்டை பிரித்திக் காண்பிக்கும்,அண்ணல்
நபியவர்களின் ஒவ்வொரு சொல் செயல் அங்கீகாரத்தையும் கற்றுக் கொள்வதுதான்
அனைத்து முஸ்லிம்கள் மீதும் கடமையாகும்.
இந்தக் கல்வியைத்தான் அன்று மாநபித் தோழர்கள் கடமை எனக்கற்று வந்தார்கள்.
குர்ஆன் மற்றும்  நபிமொழி தான் மனித வாழ்விற்கு வழிகாட்டி என்பதை நன்கு
விளங்கி வைத்திருந்ததின் காரணமாக, தங்கள் குடும்பத்தின் ஒவ்வொரு
அங்கத்தினரும் அதைக் கட்டாயம் கற்க வலியுறுத்தினார்கள்.
இவர்களின் வழியில் வந்த   தாபியீன்களும்,தபஅ தாபியீன்களும்,நமது
இமாம்களும் இந்தக் கல்விக்காகத்தான் தங்கள் தாய் நாட்டை விட்டும்
அயல்நாடு வரை பயணம் செய்தார்கள்.
அன்று பல ஆயிரங்களை செலவு செய்தாவது அதைக்  கற்றிட முன்னோர்கள் சிரமப்பட்டார்கள்.
ஆனால் இன்று பல ஆயிரம் கொடுத்து அழைத்தாலும் அந்தக் கல்வியைக் கற்றிட
நம்மில் யாரும் முன்வருவதில்லை.
வாழையடி வாழையாக வந்த அந்தக் கல்விக்காக நம் முன்னோர்கள் பல்லாயிரக்
கணக்கில் செலவுசெய்து அரபி மதரசாக்கள்,கல்லூரிகள் என ஆரம்பித்து சிரம்பட
நடத்தி வந்தார்கள். அதில் படிக்கும்   மாணவர்களுக்கு அனைத்துமே இலவசமாக
வழங்கி வந்தார்கள்.
பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள் கற்க அங்கு
அனுப்பி வைத்தார்கள்.அதில் பயின்ற மாணவர்கள் ஆலிம்களாகவும்  மார்க்க மேதைகளாகவும்
சட்ட வல்லுனர்களாகவும் தயாராக்கப்பட்டார்கள்.இந்த நூற்றாண்டின் விடி
வெள்ளிகள் அவர்கள்.மார்க்க மேதைகள் இல்லா நூற்றாண்டாக அடுத்த நூற்றாண்டு
மாறிவிடுமோ?என
உலமாக்கள் மனம் நொந்து போய் உள்ளார்கள்.
ஆனால் இன்று பணத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு  இலட்சக்  கணக்கில் செலவு
செய்து தங்கள் பிள்ளைகளை கல்வி கற்க அனுப்பும் பெற்றோர்கள்,அல்லாஹ்வையும்
அவனின் திருத்தூதரையும்
அவர்களுக்கு நினைவூட்ட மறுப்பதினால்,கல்லூரிப் படிப்பை முடித்து கை நிறைய
சம்பாதித்து
பெற்றோகளின் கைகளை நிரப்ப வேண்டிய அவர்கள்,மாற்றாருடன் கைகோர்த்துக் கொண்டு தவறான
உறவால் வயிற்றில் கருவை நிரப்பியவர்களாக.மார்க்கத்தையும்,பெற்றோரின்
ஏக்கத்தையும் பொருட்படுத்தாது,நெருப்பைக் கண்ட ஈசல்களைப் போல நரகை நோக்கி
ஓடிக்கொண்டிருக்கின்றனர்.
இன்னும் எத்தனை பெற்றோர்கள் தங்களை பிள்ளைகளை மாற்றாருக்குத்  தாரை
வார்க்கப் போகின்றனரோ?
என்ற பீதியில் இஸ்லாமிய சமுதாயம் உரைந்து போய் நிற்கிறது.பிள்ளைகள்
வளர்ந்த பின்பு பெற்றோரை மதிப்பதற்கு பதிலாக அவர்களின் மானத்தை காலில்
போட்டு மிதிக்கின்றனர்.இதற்குக்  காரணம் யார்?
பிறக்கின்ற குழந்தைகள் அனைத்தும் இயற்கை மார்க்கமான இஸ்லாத்தின்
அடிப்படையில் தான் பிறக்கின்றன.ஆனால் அவர்களின் பெற்றோர் அவர்களை
யூதர்களாகவோ கிறிஸ்தவர்களாகவோ
நெருப்பை வணங்குபவர்களாகவோ மாற்றி விடுகின்றனர்.(அல்ஹதீஸ்)
ஆம் நம் பிள்ளைகள் மாற்று மதத்தவரோடு ஓடக் காரணம் நம்
பெற்றோர்கள்தாம்.சிறுவயதிலேயே  அவர்களின் உள்ளத்தில் அல்லாஹ்வுடைய
அச்சத்தை  விதைப்பது பெற்றோரின் மீது கடமை.
ஏழு வயதை அடைந்து விட்டால் தொழுகையைக் கொண்டு ஏவ வேண்டும்.பத்து வயதை
அடைந்தும் தொழாமலிருக்கும் பிள்ளைகளை அடித்து தொழும்படி ஏவ வேண்டும்.
இதை செய்யத் தவறும்  பெற்றோர் தங்கள் பிள்ளைகளை மாற்று மதத்திற்கு மாற அனுமதி
கொடுத்துவிட்டார்கள் என்றுதான் அர்த்தமாகும்.ஏனெனில் பிள்ளைகள் கவனித்து,கண்டித்து
வளர்க்கப்பட வேண்டிய வயது 10  முதல் 15 வயது வரைதான்.இதற்குள் அவர்கள்
பக்குவப்படுத்தப்
பட வேண்டும்.தொழுகையை விடுபவன் மார்க்கத்தையே விட்டவன் என்ற உள்ளச்சத்தையும்,
குர்ஆன் ஓதத் தெரியாதவன்  அல்லாஹ்வின் வெறுப்புக்கு ஆளாவான்.என்ற பயத்தையும்
அவர்களின் இதயத்தில் பசுமரத்தாணி போல்  பதியச் செய்ய வேண்டும்.
15 வயதை அடையும் போது தங்கள் பிள்ளைகள் குர்ஆனை குறைந்தது ஒரு முறையாவது
முடித்திருக்க வேண்டும். அவ்வாறில்லையெனில் அதற்கு என்ன காரணம்?என
அறிந்து உடனடி நடவடிக்கை எடுப்பது ஒவ்வொரு பெற்றோரின் மீதும்
கடமையாகும்.நம் வாழ்வின் வழிகாட்டி
இந்த வேதம் தான் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.கடைசி மூச்சிருக்கும் வரை
எந்தச் சூழ்நிலையிலும் தொழுகைய விடாது தொழ வேண்டுமென  அன்போடு ஆணை
பிறப்பிக்க வேண்டும். பருவ வயது அடையும்முன்அவர்களை இறைவழியில் செல்லத்
தூண்டிக் கொண்டிருக்கும்
பெற்றோர்கள்,அவர்கள் பருவ வயதை அடைந்து விட்டால் தாங்களாகவே அனைத்து நல்
அமல்களையும் செய்வதையும்,பெற்றோர்களுக்கு பணிந்து நடப்பதையும்  கண்
குளிரக் காண்பார்கள்.
ஆனால் குழந்தை வளர்ப்பை வெறும் உலக ஆதாயத்திற்காகப் பயன் படுத்தும் பெற்றோர்கள்,
பிள்ளைகளுக்கு குர்ஆன் ஓதக்கற்றுக் கொடுப்பதற்கு பதிலாக தொலைக் காட்சிப்
பெட்டி முன்
அமர்ந்து அதில் தோன்றும்  நடிகை நடிகர்களின்
பெயர்களையும்,திரையரங்குகளுக்கு அவர்களை
அழைத்துச்சென்று  அருவருப்பான கட்சியை பெற்றோர்முன் அமர்ந்து எப்படிப்
பார்ப்பது?அந்நிய  ஆண்களையும்,அந்நியப் பெண்களையும் அரைகுறை ஆடைகளோடு
எப்படிப் பார்த்து ரசிப்பது?என்பதையும்,கற்றுக் கொடுப்பார்கள்.தங்கள்
மரணத்திற்குப் பின்னால் உதவும் பிள்ளைகளை
வளர்ப்பதற்கு பதிலாக பிள்ளைகளின் எதிர்காலம்  நன்றாக இருக்க வேண்டும் என்ற
நொண்டிச்சாக்கை  கூறி மார்க்கக் கல்வியை புறம் தள்ளிவிட்டு  உலகின்
ஆதாயத்தை  மட்டும் சம்பாதிக்கும் கல்வியைக் கற்றுக் கொள்ள ஆர்வம்
காட்டுவார்கள்.
அல்லாஹ்விற்கும்,பெற்றோருக்கும்,பயமின்றி வளரும் ஆண் பிள்ளைகளின் நிலை,
பருவ வயதை அடையும் போது மிகவும் பயங்கரமாக இருக்கும்.ஷைத்தானின் ஆதிக்கத்தை
முலையிலேயே கிள்ளி எரியாததின் விளைவு வாலிப வயதையடையும் போது,தாய் தந்தை
எதிரிலேயே புகை பிடிப்பது,அன்னியப் பெண்ணோடு போனில் பேசுவது,எனத் தொடங்கி
 படிப்படியாக பல பாவங்களின் பக்கம்  முன்னேறிக் கொண்டே போவார்கள். கண்டிக்க
முற்படும் பெற்றோரை  எதிர்த்து பேசுவார்கள்.அடிக்க முற்படும் பெற்றோரின்
கைகளை தடுத்து
 கீழே தள்ளிவிடக் கூட தயங்க மாட்டார்கள்.கண்ணெதிரில் நடை பெரும் பாவங்கள்
ஒருபுறமிருக்க
 மறைவில் அரங்கேறும் பாவங்கள் ஏராளமாக நீண்டுகொண்டே  போகும்.
ஒழுக்கமும் நாணமும் சரியாகக் கற்பிக்கப்படாத பெண்பிள்ளைகள்,பருவ வயதை அடையும்போது
படிப்பதற்காக விடுதிகளிலோ,உறவினர் வீடுகளிலோ,தங்கிப்படிக்க அனுமதிக்கும்
போது,அதிலும்
குறிப்பாக இருபாலாரும் இணைந்து படிக்கும்
பள்ளியிலோ,கல்லூரியிலோ,சேர்த்துப்  படிக்க வைக்கும்  போது,மாற்றார்களின்
வலையில் விழுவதற்கு மிகவும் எளிதாகி விடுகிறது.நட்பு எனத் தொடங்கி
காலப்போக்கில் கயவர்களோடு கண்காணாத இடத்திற்கு ஓடிப்போகும் அளவிற்கு
தள்ளப் படுகிறார்கள்.
உலக ஆதாயம் வேண்டாமென மார்க்கம் நமக்கு தடை விதிக்க வில்லை. ஆனால் யார் சம்பாதிக்க
வேண்டும்?யார் குடும்பத்தைக்  கட்டுகோப்பாகக்  காக்க வேண்டும்?என்பதை
மார்க்கம் நமக்குத்
தெளிவுபடுத்தியுள்ளது.பருவமடைந்த பெண்பிள்ளைகள் படிப்பதற்கு ஏற்ற தனி
பள்ளிகள்,கல்லூரிகள்
இருப்பின் தாராளமாக படிக்க வைக்கலாம்.ஆனால் அதற்கேற்றச் சூழல்
இல்லாதிருப்பின் கண்டிப்பாக
இருபாலாரும் இணைந்து படிக்கும் படிப்பை நிருத்திடுவது பெற்றோரின்  மீது கடமையாகும்.
இந்தச்சூழலில் படிக்க வைக்கும் பெற்றோர் உலக ஆதாயத்தை மட்டும் நோக்கமாகக்
கொண்டுதான் படிக்க வைக்கின்றனர்.என்பதில் எவருக்கும் மாற்றுக்
கருத்திருக்க முடியாது. இவ்வாறு படிக்கும் பெண்பிள்ளைகள் மார்க்கத்தின்
போதனைகளை மறந்தும் கூட பின்பற்ற மாட்டார்கள்.கயவர்களின்
காதல் வலையில் எளிதில் சிக்குவதோடு,மார்க்கத்தின் எல்லையையும் தாண்டத்
தயங்க மாட்டார்கள்.
பெண் பிள்ளைகள் நன்றாகப்  படித்தால் தான் நாளை தங்களின் குழந்தைகளுக்கு
அவர்களால்
மார்க்கத்தையும்,உலகில் நாம் பிறந்த நோக்கத்தையும் நன்றாகக்  கற்றுக்
கொடுக்க முடியும்.
ஆனால் அவர்களை வேலைக்கு அனுப்புவதும்,வேலைக்கு அனுப்பும் சிந்தனை கொண்ட
மாப்பிள்ளைக்கு மணமுடித்துக் கொடுப்பதும், அவர்களுக்கு நாம் செய்யும்
துரோகமட்டுமின்றி
அவர்களின் சந்ததியே உலகின் மோகத்தில் மூழ்குவதற்கு வழி ஏற்படுத்திக்
கொடுத்த பாவத்திற்கும்
ஆளாகுவோம்.வேலைக்கு போகும் தாய்மார்களுக்கு  பிறக்கும் குழந்தைகள்
எப்படி வளர்கிறார்கள்?
என்பதை அனைவரும் நன்கு அறிவோம்.அதற்கு உணவும் உடையும் கொடுக்கும்
உறவினர்கள் இருக்கலாம்,ஆனால் முறையானக்  கல்வியையும் தரமான அன்பையும்
ஊட்டி வளர்க்க தாயன்றி
வேறு எவரால் முடியும்?
சுருங்கச் சொல்வதானால் பிள்ளைகளுக்குத் தவறான வழியைக் காண்பிக்கும் பெற்றோகள்
முதலில் தங்களை சரி செய்து கொள்ளவேண்டும்.பிள்ளைகளுக்கு எதிரில் புகைப்
பிடித்தல் மது   அருந்துதல் போன்ற காரியங்களில் ஈடுபடும்
தந்தையர்களும்,சினிமாப் பார்க்க திரையரங்கிற்கு
அழைத்துச் செல்லும் பெற்றோர்களும்,அசிங்கத்தை தொலைக்காட்சிப்
பெட்டிமூலம் பிள்ளைகள்
பார்க்க வகை செய்யும்  தாய்மார்களும்,தங்களை மாற்றிக் கொள்வதோடு, இனி இது போன்ற
தவறுகளை நாங்கள் செய்ய மாட்டோம்.நீங்களும் செய்ய வேண்டாம்.என வெளிப்படையாக
அவர்களிடம் எடுத்துச் சொன்னால் இன்ஷா அல்லாஹ் நிச்சயம் சமுதாயத்தில் மாற்றம் வரும்.
மௌலவி N.S.ஷம்சுத்தீன் சாதிக்.பாஜில்மன்பஈ (துபை).

சிக்கன் 65 அதிர்ச்சி ரிப்போர்ட்!!! ..

          ராகவனுக்கு முப்பது வயதுகூட ஆகவில்லை. அவருக்கு கேன்சர் என்று மருத்துவர்கள் சொன்னதும், ஒட்டுமொத்த குடும்பமே அதிர்ச்சியில் உறைந்து போனது. காரணம் ராகவனிடம் மது, புகை என்று எந்த கெட்ட பழக்கமும் இல்லை. பிறகு எப்படி கேன்சர்? தலையைப் பிய்த்துக்கொண்ட மருத்துவர்கள் கடைசியாக அவரது உணவுப் பழக்கத்தை ஆராய்ந்தபோதுதான் உண்மை தெரியவந்தது. அசைவப்பிரியரான ராகவன் தினமும் சாப்பாட்டில் சிக்கன் 65 இல்லாமல் சாப்பிடவே மாட்டாராம். அதுவும் செக்கச் சிவந்த நிலையில் மொறு மொறுவென்று இருக்கும் சிக்கன் 65ஐத்தான் விரும்பிச் சாப்பிடுவாராம். அதுதான் அவரது கேன்சருக்குக் காரணமாம்.

எப்படி? பளிச்சென்று தூக்கலாகத் தெரிவதற்காக சிக்கனுடன் சேர்க்கப்படும் அந்த சிவப்பு நிற கெமிக்கல் பவுடர்தான் அந்த கேன்சருக்கு முழுக்காரணம். இந்த கெமிக்கல் கலந்த சிக்கன் 65 சாப்பிடுவதால் வயிற்றில் கேன்சர், சிறுநீரகக் கோளாறு. மரபணுக்களில் பாதிப்பு போன்ற நோய்கள் உண்டாவதைக் கண்டறிந்திருக்கிறார்கள்.உணவுப் பொருட்களில் பயன்படுத்தக்கூடிய செயற்கை நிறங்கள் பற்றியும், பயன்படுத்தக்கூடாத நிறங்கள் பற்றியும் நெல்லை மாநகராட்சியின் உணவு ஆய்வாளர் சங்கரலிங்கம் பேசும்போது. உணவு வகைகளில் பயன்படுத்தக்கூடிய செயற்கை நிறங்கள், பயன்படுத்தக்கூடாத செயற்கை நிறங்கள் என உண்டு. இந்தியாவில் 8 வகையான செயற்கை நிறங்களை மட்டுமே உணவுப் பொருட்களில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த நிறங்களும் குறிப்பிட்ட அளவு. அதாவது 10 கிலோ உணவுப் பொருளுக்கு 1 கிராம் மட்டுமே சேர்க்க அனுமதி. ஆனால் இதை யாரும் கடைப்பிடிப்பதில்லை. அனுமதிக்கப்பட்ட உணவு வகைகளில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் செயற்கை நிறங்களைச் சேர்த்தால் உடலுக்குக் கேடுதான். எடுத்துக்காட்டாக, உணவில் சிவப்பு நிறம் கொடுக்க பயன்படுத்தப்படும் எரித்ரோசின் அளவு கூடினால் கழுத்துக் கழலை நோய் (goItre) வரும்.

இந்த செயற்கை நிறங்களும் இனிப்பு வகைகளில் மட்டுமே சேர்க்க அனுமதி. கார வகையான உணவுகளில் சேர்க்க அனுமதி கிடையாது. பொன்சியூ4.ஆர்., எரித்ரோசின் பயன்படுத்தினால் சிவப்பு நிறம் கிடைக்கும். பிரில்லியண்ட் புளூ, இண்டிகோ கார்மைன் பயன்படுத்தினால் ஊதா கலர் கிடைக்கும். இந்த மாதிரியாக கிடைக்கக் கூடிய எட்டு வகையான கலர்களை ஐஸ்கிரீம் ஃப்ளேவர்டு மில்க், பிஸ்கட், இனிப்பு வகைகள், டின்களில் அடைத்து வரக்கூடிய பட்டாணி வகைகள், பாட்டில் பழ ஜூஸ் வகைகள், குளிர்பானங்கள் என ஏழு வகையான உணவுகளில் மட்டுமே சேர்க்க அனுமதி. கார வகையான உணவுப் பொருட்களில் செயற்கை வண்ணங்களை கண்டிப்பாகச் சேர்க்கக்கூடாது.

 ஆனால் நமது மக்களின் மனதில் உணவைவிட உணவின் கலர்தான் பளிச்சென்று பதிந்து இருக்கிறது. சிக்கன் 65 என்றால் சிவப்பாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அது சிக்கன் 65 என்ற முடிவில் மக்கள் இருக்கிறார்கள். மக்களின் மனதிற்கேற்ப வியாபாரிகளும் சிக்கன் 65 நிறத்தைக் கூட்டி, ஆபத்தை அறியாமலேயே வியாபாரம் செய்கின்றனர். சிக்கன் 65-ல் செயற்கை வண்ணங்களைச் சேர்ப்பதே தவறு. அதிலும் அனுமதிக்கப்படாத செயற்கை வண்ணங்களை அளவுக்கு அதிகமாக சேர்க்கின்றனர். எடுத்துக்காட்டாக சூடான் டை, மெட்டானில் எல்லோ கெமிக்கல்களைச் சேர்த்து துணிகளுக்கு சாயம் ஏற்றுவார்கள். இன்று இதனை சிக்கன் 65யுடன் சேர்த்து விடுகின்றனர். இப்படி சேர்ப்பதால் சிக்கன் 65 ரெட் கலரில் பளிச்சென்று தூக்கலாகத் தெரியும். இதைச் சாப்பிடுவதால் குடல்கேன்சர், சிறுநீரகக் கோளாறு, மரபணுக்களில் கோளாறு என கொடிய நோய்களை உண்டாக்கி விடுகிறது.

 கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் சூடான் டையை உணவில் பயன்படுத்தத் தடை விதித்துள்ளனர். செயற்கை நிறம் கொடுக்கக் கூடிய சூடான் டை கலந்த உணவை எலிகளுக்குக் கொடுத்து ஆராய்ச்சி செய்து பார்த்ததில் எலிகளின் சிறுநீரகங்களிலும் கல்லீரல்களிலும் கேன்சர் உருவாகியதாம்.இப்படி உணவுப் பொருளில் கலப்படம் செய்து வியாபாரம் செய்யும் வியாபாரிகள் உணவு தடைச்சட்டத்தின் பிடியிலிருந்தும் ஈஸியாகத் தப்பி விடுகின்றனர்.

 உணவுக் கலப்பட வழக்குகளில் ஆஜராகும் வழக்கறிஞர் காந்திமதிநாதன் கூறும்போது: ஃபுட்கலர்ஸ் விற்பவர்கள் மீது சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. அந்த ஃபுட்கலர்ஸ் உணவுப் பொருட்களில் கலந்து உணவுப் பொருட்களுக்கு நிறத்தைக் கொடுத்த பின்புதான் அது குற்றமாகிறது. கலப்பட உணவுப் பொருட்களின் மீது வழக்குத் தொடரவேண்டுமானால் முதலில் தயாரித்து வைத்த உணவுப் பொருட்களை மூன்று பாகங்களாக சாம்பிள் எடுக்க வேண்டும். முதல் பாகத்தை உடனடியாக கெமிக்கல் லேபுக்கு அனுப்பி கலப்படத்தை உறுதி செய்து, ரிப்போர்ட் வாங்கி அந்த அடிப்படையில் வியாபாரியின் மீது வழக்குத் தொடரவேண்டும். மீதமுள்ள இரண்டு பாகமும் சுகாதார அதிகாரியின் கட்டுப்பாட்டில் வைத்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும்போது சுகாதார அதிகாரி கட்டுப்பாட்டில் உள்ள உணவுப் பொருளின் இரண்டு பாகங்களை நீதிமன்றம் மூலம் மத்திய பகுப்பாய்வுக் கூடத்திடம் ரிசல்ட் கேட்கவேண்டும். அந்தச் சூழ்நிலையில் கண்டிப்பாக உணவுப் பொருள் கெட்டுப்போய்த்தான் இருக்கும். மத்திய பகுப்பாய்வுக் கூடத்தால் சரியான ரிசல்ட்டை கொடுக்க முடியாது. இதனால் வழக்கு நிற்காமல் அடிபட்டு விடும்.

 எடுத்துக்காட்டாக சூடான்டையால் நிறம் ஊட்டப்பட்ட சிக்கன் 65ஐ சாம்பிள் எடுத்து கெட்டுப்போகாமல் இருக்க பார்மலின் என்ற கெமிக்கலை சிக்கன்-65 மீது ஊற்றி வைப்பார்கள். அந்த கெமிக்கல் சிக்கன் 65யின் முழுப்பகுதியையும் அடைய வாய்ப்புக் குறைவு. அப்படி கெமிக்கல் படாத இடம் முதலில் கெட்டுப்போய் மொத்த சிக்கன் 65ஐயும் கெட்டுப்போகச் செய்து விடுகிறது. அதனால் அதிலிருந்து சரியான ரிசல்ட் எடுக்க முடியாமல் போய் விடுகிறது.உணவுக் கலப்பட சட்டத்தைப் பொறுத்தமட்டில் வியாபாரிகளுக்கும், சில பங்களிப்பு இருப்பதால் வியாபாரிகள் எளிதில் தப்பிவிடுகின்றனர்'' என்கிறார். அதனால் தேவையற்ற கெமிக்கல் கலர் பொடிகள் சேர்த்த சிக்கன்களைத் தவிர்ப்பது ஒன்றே இதற்குத் தீர்வு?


கேன்சர் ஆபத்து!

 இது குறித்து சென்னையைச் சேர்ந்த பிரபல குடல்நோய் நிபுணர் டாக்டர் சதீஷிடம் கேட்டபோது: ``சிக்கன் 65ல் சேர்க்கப்படும் நிறத்தால் உடனடி பாதிப்பாக நெஞ்சு எரிச்சல், அமிலத்தன்மை அதிகரிப்பால் இரைப்பை அழற்சி ஏற்படும். நீண்ட நாட்கள் அதைச் சாப்பிட்டு வந்தால் பெருங்குடலில் கேன்சர், சிறுநீரகப் பாதிப்பு உண்டாகும். தொடர்ந்து சிறுநீரகத்திலிருந்து ரசாயன நச்சுப் பொருட்கள் ரத்தத்தோடு கலந்து சிறுநீர்ப் பைக்கும் செல்லும். அங்கே ஏற்படும் மாற்றங்களால் சிறுநீர்ப் பையில் புற்றுநோய் வரும் ஆபத்து உண்டு. கழுத்தில் கழலை, மரபணுக்களில் மாற்றங்கள் ஏற்படுவதையும் தவிர்க்க முடியாது' என்று எச்சரிக்கிறார்